பக்கம் எண் :

427

 

மிகப்பேர் எவ்வம் உறினும் -யாம் மிகப் பெரிய துன்ப முறினும்;
எனைத்து  உணர்ச்சியில்லோர்  உடைமை  யுள்ளேம் - சிறிதும்
அறிவிலாதோருடைய செல்வம் பயன்படாமையின் அதனை
நினையேம்; நல் லறி வுடையோர் நல்குரவு- நல்லறிவினை
யுடையோரது வறுமை பயன் படுதலின் அதனை; பெரும - பெருமானே;
யாம் உவந்து நனி பெரிது உள்ளுதும் - யாம் உவந்து மிகப் பெரிதும்
நினைப்பேம் எ-று.

     எனா வென்பது, எண்ணிடைச் சொல்.

     விளக்கம்: வாவுதல், தாவுதல்; இதனால் குதிரையை “வாம்பரி”
யென்றலு முண்டு. பாடறிந் தொழுகும் பண்பிலர் வேந்தருடைய தேரும்
களிறும்   வென்றியும்  மிகச் சிறந்தனவாயினும், எம்மாற் பொருளாகக்
கருதப்படா  வெனத்   தமது  கருத்தை  வற்புறுத்தற்கு, அவை
ஒவ்வொன்றனையும் வகுத்தும் சிறப்பித்தும் கூறினார். பரிசிலர்க்கு
வழங்குதற் குரியவாகலின் தேரையும் களிற்றையும், பொருட்கு
வருவாயாதலின் வென்றியையும் எடுத்தோதினார். முஞ்ஞை யென்றது,
இப்போது முன்னைக்கீரை யென வழங்குகிறது. பசுமுன்னை, எருமை
முன்னை யென்ற வகை யிரண்டனுள், பசுமுன்னையே ஈண்டைக்குப்
பயன்படுவது. பாடறிந்தொழுகும் பண்புடையவர் நல்லறிவுடையராதல்
வெளிப்படையாதலால்,அப் பண்பிலாரை, “உணர்ச்சி யில்லோர்”என்றார்.
நல்லறிவுடையோர் நல்குரவு உள்ளுதும் என்றது, “பழிமலைந் தெய்திய
ஆக்கத்திற் சான்றோர், கழிநல் குரவே தலை”(குறள்.657) என்ற
திருவள்ளுவர் கருத்தைப் புலப்படுத்துகிறது.

        198. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்

      வடம வண்ணக்கன் பேரி சாத்தனா ரென்பார், அகப் பாட்டுக்கள்
பல பாடிய சான்றோராவர். மதுரைக் குமரனார் போல, அத்துணைப் புலமை
வீறு படைத்தவரல்ல ரெனினும், தம் கருத்தை நயமான முறையில்
வெளிப்படுக்கும் திறலுடையவர். பொன்னோட்டம் பார்க்கும்
தொழியினராதலை வடமவண்ணக்கன் என்ற சிறப்பு இனிது காட்டுகிற
தெனினும், இவர் வழங்கும் குறப்புமொழிகள் நல்ல சான்று கூறி
வற்புறுத்துகின்றன. இவர், இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய பாண்டியன்
நன்மாறனைப் பன்முறை கண்டு பழகியவர். அவர் நெடுந் தொலைவிலுள்ள
நாடுகட்குச் செல்லவேண்டி யிருந்தமையின், அவனைக் கண்டு விடை
பெற்றுப் போக ஒருகால் வந்தார். அக்காலை, அவன் முதுமையுற்றிருந்தான்.
அவன் மக்கள் பலரும் நல்ல ஆடவராய்த் தமிழக மெங்கும் திரிந்து,
வெற்றிச் செல்வமும் பொருட் செல்வமும் கொணர்ந்தனர். மக்கட்
செல்வத்தாலும், அரசியற் செல்வத்தாலும்,நன்மாறன் செருக்குற்றுப் பேரி
சாத்தனார்க்குப் பரிசில் தாராது நீட்டித்தான். ஆவூர் மூலங்கிழாரையும்
இவ்வாறே இகழ்ந்து, பின்பு அவர் வெகுண்டு பாடக்கேட்டுப் பரிசில் தந்த
அந்த மனப் பண்பே இப்போதும் அவன் பால் இருந்தது. ஒரு சில
மக்களைப் பெற்று, அவர் இளமைப்பருவ நீங்கா முன்பே அத்துணைச்
செருக்குற்ற இவன், அம்மக்கள் மறங் குன்றா ஆடவராய் நாடு முற்றும்
சென்று வென்றி நிலைநாட்டி வரும்