பக்கம் எண் :

54

    

விடத்தே; நீர் பெருகத்  தட்டோர்  -  நீர்நிலை   மிகும்   பரிசு
தளைத்தோர்; இவண் தட்டோர் - தாம் செல்லு முலகத்துச் செல்வ
முதலாகிய   மூன்றினையும்   இவ்வுலகத்துத்    தம்    பேரோடு
தளைத்தோராவர்; தள்ளாதோர் - அந் நீரைத் தளையாதவர்; இவண்
தள்ளாதோர் - இவ்வுலகத்துத் தம் பெயரைத் தளையாதோர் எ-று.

     இதனால் நீயும் நீர்நிலை பெருகத் தட்கவேண்டுமென்பது கருத்தாகக்
கொள்க. மற்றும் அம்மவும் அசைநிலை.   உணவின்  பிண்டம்  உண்டி
முதற்றாதலான், உண்டி கொடுத்தோர்  உயிர்  கொடுத்தோரென  மாறிக்
கூட்டுக. தள்ளாதோர் இவண் தள்ளாதோ  ராதலால்,  செழிய,  இதனை
இகழாது  வல்லே  செய்யென  ஒருசொல்   வருவித்துரைப்பாரு  முளர்.
தட்டோரென்பதற்குத் தம் பெயரைத் தளைத்தோ ரெனினு மமையும்.

     நீரும் நிலனும் புணரியோர் உயிரும் உடம்பும் படைத்தோரெனவே,
செல்லு முலகத்துச் செல்வமும், வித்திவானோக்கும் புன்புலம் இறைவன்
தாட் குதவாதெனவே,நீர்நிலை பெருகத் தட்டலால் வானோக்கவேண்டாத
நன்புலம்   இறைவன்  தாட்கு  உதவி  ஞாலங்  காவலர்   தோள்வலி
முருக்குதலும், நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் இவண்
தட்டோ ரெனவே,நல்லிசை நிறுத்தலும் கூறப்பட்டன.

     நீர்நிலை   பெருகத்  தட்கவே  அறன்  முதன் மூன்றும் பயக்கு
மென்பது கூறினமையான் இது முதுமொழிக் காஞ்சியாயிற்று.  

      விளக்கம்:முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்து பட்டஞாலம் என்று
இயைதலால்,வளைஇயென்பதற்குச் சூழப்பட்டு  என்று  பொருளுரைத்தார். 
புகழ் நிறீஇ  யென்றவிடத்து,புகழ்க்கு ஆதாரம் உலக மாதலின், “புகழை
யுலகத்தின்கண்ணே நிறுத்தி” யென்றார்; “சிறந்த   நல்லிசை   நிறுத்த
வேண்டினும்” என்றவிடத்தும் இவ்வாறு உரை கூறுதல் காண்க. இருந்து
ஆளும் உலகம் நிலவுலகமாதலால்,செல்லு முலகம் மறுமை யுலகமாயிற்று.
ஞாலங் காவலர் -  ஞாலம்   காக்கும்  வேந்தர்.  உடம்பு  உணவால்
வளர்தலின்,உணவின் பிண்டமெனப் பட்டது. “மக்கள் யாக்கை யுணவின்
பிண்டம்” (10:90) என மணிமேகலை யாசிரியரும் கூறுவர்.புணர்த்தவரைப்
“புணரியோர்” என்றார். புணர்த்தல், கூட்டுதல்; அஃதாவது நீர் இல்லா
நிலத்தில் நீர்நிலை யுண்டு பண்ணுதல். ஆறு, ஏரி, குளம் முதலியவற்றால்
நீர் வருவாயின்றி மழை வருவா யொன்றையே நோக்கி நிற்கும் புன்செய்
நிலத்தை “வானோர்க்கும் புன்புலம்” என்றார்.இக்காலத்தும் இந்நிலங்களை
“வானவாரி” யென்பர். தாள், முயற்சி; வெற்றிச் சிறப்பால் பகை களைந்து
செல்வம் பெருகுவிக்கும் அரசியல் முயற்சி. இயல்பாகவே ஆழ்ந்திருக்கும்
நிலப்பகுதி தேர்ந்து நீர்நிலை யமைத்தல் இயல்பாதலால், “நிலன் நெளி
மருங்கு” என்றார். மூன்றுமாவன, செல்லு முலகத்துச் செல்வம், ஞாலங்
காவலர்  தோள்வலி  முருக்குதல்,   நீர்நிலை   பெருகத்   தளைத்தல்.
“வித்திவானோக்கும்   புன்புலம்  இறைவன்  தாட்கு  உதவாது” என்ற
இவ்வுண்மையை இகழாது என இவ்வுரைகாரர் கூறியது போலாது, “இகழாது
வல்லே செய்” என ஒருசொல் வருவித்துரைத்தலு முண்டு. களைதல்,கட்டல்
என வருதல்போலத் தளைத்தல் தட்டல் என வந்தது. நிலனெளி மருங்கில்
நெடிய