| விளக்கம்: வான் கண்மாறுதலாவது மழையாகிய கண்ணோட்ட மின்றி யொழிதலாதலின் வான் கண்மாறினும் என்றதற்கு மழை பெய்யாது மாறினும் என்றார். நசை, ஈண்டு நச்சப்படும் இன்பங்குறித்து நின்றது. அனையையுமல்லை யென்றதற்கு ஏது இதுவென்பார், வறுயைாற் கொடுக்க முடியாமையின் நாணி என்றும், நாணத்தால்அவரெதிர் முகநோக்கமாட்டாதுஎன்றும், உள்ளதன்மையைக்குறிப்பாராய், இறந்துபடுவையென்றும் உரைகாரர் கூறினார். ஆகவே, நீ பெரிதும் மானமுடையை யென்றாராயிற்று. எம்மனோரென்றது, தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பற்றாதல்தோன்ற,எம்மனோர்என்றதுபிறரை நோக்கியன்றென வுணர்க என்றுரைத்தார். ஒன்னார் மதிலைக் கொள்ளு முன்பேபாணார்க்குக்கொடுத்தலின்,அவர் அதனைப் பெறுங்காறும் பாணர்க்குக்கடன்பட்டான்போறலின், பாண்கடன் என்றாரென்றுமாம். பாணர் பொருநர் புலவர் முதலாயினார்க்கு வறுமை யெய்தியபோது அவர் வேண்டுவன தந்து புறந்தருதல் பண்டைநாளைச் செல்வர்க்குக் கடனாகக் குறிக்கப்பட்டிருந்தது.செல்வர்அது செய்யாவழி, வறியோரது வறுமை செல்வர்பால் பகைமையுணர்வை யெழுப்பிச் செல்வரது செல்வ வருவாய் கெடுதற்கேற்றசூழ்ச்சியும்கிளர்ச்சியும்நாட்டில்எழுப்பிச் செல்வர் வாழ்வைச் சீரழிக்கும்மென்பதைப் பண்டையோர் நன்கறிந்தமை இதனால் விளக்க முறுகிறது. --- 204. வல்விலோரி பெருங்கொடை வள்ளலாகிய வல்வில் ஓரி கொல்லிமலைக் குரியனாய் அருளாட்சி புரிந்து வருகையில் வன்பரணர் முதலிய சான்றோர் அவன்பால் பரிசில் பெற்றுச் சிறப்பெய்தினார். அவருள் கழைதின் யானையார் என்ற சான்றோர் ஒருகால் வல்விலோரிபால்சென்றிருந்தார். அக்காலத்தே பரிசிற்றுறைப் பொருளில் இப் பாட்டைப் பாடினார். இதன்கண் ஈவோர்க்கும் ஏற்போர்க்கும் உள்ள உயர்வு தாழ்வுகளை எடுத்தோதி, ஈவோர் ஈயேனென்பதால், ஏற்போரினும் இழிந்தவராவரென்றும், ஏற்போர் கொள்ளேனென்பதால் ஈவோரினும் உயர்ந்தவராவரென்றும் விளக்கி, உண்ணும் நீர்நிலை வற்றிச் சேறு பட்டதாயினும் அதனை நாடிச் செல்வோர் பலராவதுபோல, வரையா ஈகையுடையோரை நாடிப்பலரும் வருவர்; வருவோர் ஒருகால் தாம் வேண்டியது பெறாவிடின், அவர் தம்மை நொந்துகொள்வதின்றிக் கொடாத வள்ளியோரை நோவார் என்று குறிக்கின்றார்.
கழைதின்யானையார் என்ற இச்சான்றோரின்இயற்பெயர் தெரிந்திலது. யானையைக் கழைதின்யானையெனச் சிறப்பித்த நயங்கண்ட சான்றோர் இவரை இச் சிறப்புப் பெயரிட்டு வழங்கினர். இவர் பாடிய பிற பாட்டுகள் கிடைக்கவில்லை. | ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர் ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர் கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று |
|