பக்கம் எண் :

112

     
 இளையரு முதியரும் வேறுபுலம் படா
எடுப்ப வெழா அய் மார்பமண் புல்ல
இடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த
வளையில் வறுங்கை யோச்சிக் கிளையுள்
5இன்ன னாயின னிளையோ னென்று
 நின்னுரை செல்லு மாயின் மற்று
முன்னூர்ப் பழுனிய கோளி யாலத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன்
வளனுஞ் செம்மலு மெமக்கென நாளும்
10ஆனாது புகழு மன்னை
 யாங்கா குவள்கொ லளிய டானே.

   திணையும் துறையு மவை......கயமனார் பாடியது.

     உரை: இளையரும் முதியரும் வேறுபுலம் படர-இளையோரும்
முதியோரும் வேற்றுநிலத்தே விலங்கிப்போக; எடுப்ப எழாஅய்-யான்
எடுப்பவும் நீ எழுந்திராயாய்; மார்பம் மண்புல்ல-நினது மார்பம் நிலத்தைப்
பொருந்த; இடைச்சுரத்து இறுத்த மள்ள-சுரத்திடை மேம்பட
வீழ்ந்தஇளையோய்; விளர்த்த வளையில் வறுங்கை யோச்சி-வெளுத்த
வளையில்லாத   வறிய  கையைத்   தலைமேலே   வைத்து;
கிளையுள்-சுற்றத்தின்கண்; இன்னனாயினன் இளையோன் என்று நின்னுரை
செல்லுமாயின்-இத்தன்மையனாயினான் இளையனென்று யான்சொல்ல நின்
இறந்துபாடு கூடிய வார்த்தை செல்லுமாயின்; முன்னூர் பழுனிய கோளி
ஆலத்து-ஊர் முன்னர்ப் பழுத்த கோளியாகிய ஆலமரத்தின்கண்; புள்ளார்
யாணர்த்தற்று-புள்ளுக்குள் மிகும் புதுவருவாயையுடைய அத்தன்மைத்து;
என் மகன் வளனும் செம்மலும் எமக்கென-என்னுடைய மகனது செல்வமும்
தலைமையும் எமக்கென்று; நாளும் ஆனாது புகழும் அன்னை-நாடோறும்
அமையாது புகழும் நின்னுடைய தாய்; என்னாகுவள்கொல்
அளியள்தான்-எவ்வாறாவாள் கொல், அவள் இரங்கத்தக்கவள் தான்; எ - று.


     வளனும் செம்மலும் புள்ளார் யாணர்த்தற்று என்றது, புள்ளெல்லாம்
சென்றணுக ஆலமரம் பயன்பட்டு நின்றாற்போல இவனும் தன் சுற்றத்தாரும்
பிறரும் நாட்டாரும் நுகரும்படி நின்றமை தோன்ற நின்றது. நின்னுரை
செல்லுமாயின் யாங்காகுவள்கொல் என்ற கருத்து, யான் நீ இறந்துபட்டவாறு
சொல்லின்,   அன்றே   அவள்   வருத்த   முறுவன்;  அது
யான்மாட்டேனென்பதாம். முன்னூர், முன் மொழி நிலையல். மற்று:
அசைநிலை.