| 5 | ஈண்டே போல வேண்டுவ னாயின் | | என்முறை வருக வென்னான் கம்மென எழுதரு பெரும்படை விலக்கி ஆண்டு நிற்கு மாண்டகை யன்னே. |
திணை: வஞ்சி. துறை: பெருஞ்சோற்று நிலை. விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.
உரை: வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம் - வேந்தன் பொருட்டுப் பசும்பொன் மண்டையில் எடுத்துக் கொடுத்த தீவிய குளிர்ந்த நறவை; தனக்கு உறும் முறை யாம் வளாவ - தனக்குரிய முறைப்படியே யாங்கள் கலந்து கொடுத்தேமாக; விலக்கி வாய் வாள் பற்றி நின்றனன் என்று சினவல் ஓம்புமின் - இவன் அதனை மறுத்துத் தன் வாய் வாளைக் கைப்பற்றி எழுந்து நிற்பானாயினான் என்று சொல்லி இவனை வெகுளுதலை விட்டொழிவீர்களாக; சிறு புல்லாளர் - சிறிய புல்லாண்மை யுடையவர்களே; ஈண்டேபோல வேண்டுவனாயின் - இங்கே எவ்வாறு ஆண்மையுடன் வாளைப் பற்றினானோ அவ்வாறே போர்க்களத்தும் செய்ய விரும்புவானாயின்; என் முறை வருக என்னான் - யான் பகைவரை நேர்படுதற்குச் செல்லும் முறை வருக என்று இரானாய்; கம்மென - விரைய; எழுதரு பெரும்படை விலக்கி - தனக்கு முன்னே எழுகின்ற பெரிய படையைக் குறுக்கிட்டு விலக்கி; ஆண்டு நிற்கும் ஆண்டகையன் - அவ்விடத்தே முந்துற்று நிற்கும் ஆண்டகைமையையுடையன் என்று அறிவீர்களாக; எ - று.
புல்லாளர், தாம் புல்லிய ஆண்மையை யுடையராயிருந்தே பிறர் தம்மைப் பேராண்மையுடையரென வுயர்த்துக் கூறுவரென மெய்ம்மையாப் பேராண்மையுடையார் செய்கைகளை ஏறட்டுக் கூறுபவர். இஃது சிறுமையுடையாரிடத்தே காணப்படுதலின், சிறு புல்லாளர் என்றார்; அண்மைவிளி. சினந்தவழிப் போர்க்குரிய அமைதி கெடுமாதலின், சினவல் ஓம்புமின் என்றார். நும்மைப்போற் சொல்லளவின்றிச் செயலிலும் தன் ஆண்மையைத் தோற்றுவிப்பவன் என்பதைத் தெளிய உணர்வீர்களாக என்பார், பெரும்படை விலக்கி ஆண்டு நிற்கும் ஆண்டகையன்என்றார். படைவீரர் அனைவரும் முறைகெட ஒழுகுவராயின், போர்வினை வென்றி பயவாதாகலின், முறைக்கேட்டினை அவன் செய்பவனல்லன் என்றதற்கு வேண்டுவனாயின் என்றார். வேண்டுவனாயின், என்றது முறைகெட ஒழுகும் சிறுமை அவன்பால் இல்லை என்பது தோற்றிநின்றது. சிறுபுல்லாளர், சினவல் ஓம்புமின்; வேண்டுவனாயின், என்னான், கம்மென, விலக்கி, நிற்கும் ஆண்டகையன் என வினைமுடிவு செய்க.
விளக்கம்: பெருஞ்சோற்று நிலையாவது, திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப், பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று (பு. வெ. 3:23) என வரும். வேந்தருண்ணும் நறவம் களிப்பு மிகவுடைய தன்மையின், |