| அதனால் இம்மனை மகளிர் நம்பால் பூக்களை வாங்கமாட்டார் என்று கருதிப்பிறர் மனைக்கண் செல்கின்றாள்; அளியள் என்று பூவிலைப் பெண்டின் பொருட்டு இரங்குவாள்போல எடுத்துரைத்தாள். இது கேட்ட நொச்சிநியமங்கிழார் வியப்பு மிகக்கொண்டு அவள் கூற்றுப் பொருளாக இப்பாட்டைப் பாடியுள்ளார். | நிறப்படைக் கொல்கா யானை மேலோன் குறும்பர்க் கெறியு மேவற் றண்ணுமை நாணுடை மாக்கட் கிரங்கு மாயின் எம்மினும் பேரெழி லிழந்து வினையெனப் | 5 | பிறர்மனை புகுவள் கொல்லோ | | அளிய டானே பூவிலைப் பெண்டே. |
திணை: காஞ்சி; துறை: பூக்கோட்காஞ்சி. நொச்சிநியமங்கிழார் பாடியது.
உரை: நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் - குத்துக்கோற்கு அடங்காத யானைமேலிருப்போனாகிய வள்ளுவன்; குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை - அரண் புறத்தே நின்று பொரும் பகைவர் பொருட்டு முழக்கும் பூக்கொள்ளுமாறு ஏவுதலையுடைய தண்ணுமையொலி; நாணுடை மாக்கட்கு இரங்கும் - போர்ப்பறை கேட்ட துணையானே புறப்படாத நாணமில்லாத வீரர்இதனைக்கேட்டு விரையச்சென்று போர்ப்பூவைப் பெறுமாறு ஒலியாநிற்கும்; ஆயின் - ஆதலால்; எம் மினும் பேரெழில் இழந்து - மனைமகளிராகிய எம்மினும் பெரிய தனது எழுச்சி குன்றி; வினையென - போர் நிகழுங் காலமாதலின் தனித்துறையும் மனைமகளிர் இனிப் பூக்கொள்ளாரென்று கருதி; பூவிலைப் பெண்டு - பூ விற்கும் பெண்டு; பிறர் மனை புகுவள் - பிற மகளிர் வாழும் மனைகட்குச் செல்லுகின்றாள் போலும்; அளியள் - அளிக்கத்தக்காள்; எ - று.
நிறப்படை - குத்துக்கோல். வலிமிக்க பட்டத்தியானை யென்றற்கு நிறப்படைக் கொல்கா யானை யென்றார். தன்பால் எழும் ஒலியால் வேந்தனால் தரப்படும் காஞ்சிப்பூவைப் பெறுமாறு வீரரைப் பணித்தலைச் செய்தலின், ஏவல் தண்ணுமை என்றார். போர்க்களத்தில், பகைவரை மேற்சென்றெறியுமாறு ஏவுவது ஏவல் வியன்பணை (பதிற். 39) எனப்படும். நாணுடைமாக்கள்: எதிர்மறைக் குறிப்பு மொழி. தனிமைத் துயருழந்து எழிலிழக்கும் எம்மினும், எம்போற்பலருடைய தொடர்பிழந்து பூ வாணிகம் குன்றவரும் இன்னாமையும் கொண்டு பெருந்துன்பமுழத்தலின் பேரெழிலிழந்துஎன்றும். எனவே அவள் இரங்கத்தகும் நிலையினளென்பது தோன்ற, அளியள் என்றும் கூறினாள். தண்ணுமை இரங்கும்; ஆயின் பூவிலைப் பெண்டு இழந்து, வினையெனப் பிறர்மனை புகுவாள்; அளியள் என வினைமுடிவு செய்க.
விளக்கம்: பூக்கோட் காஞ்சியாவது காரெதிரிய கடற்றானை, போரெதிரிய பூக்கொண்டன்று (பு. வெ. மா. 4:10) என வரும். நுதலிற் பாய்ந்து |