| மையல் நோக்கின் கண்டார்க்குப் பேதுறவு விளைக்கும் பாார்வையினையு முடைய; தையலை நயந்தோர் அளியர் - பெண்ணை விரும்பியவர்கள் அளிக்கத்தக்கவராவர்; இவள் தன்மையார் - இவளுடைய அண்ணன் மாராகிய உடன் பிறந்தோர்; நிரல் அல் லோர்க்குத் தரலோ இல்லென - குடிமை ஆண்மை முதலியவற்றால் ஒவ்வாதாருக்குத் தருவதில்லை யென்று சொல்லி; செல்வம் வேண்டார்-மகள் வேண்டினோர் தரும் செல்வத்தை விழையாராய்; செருப்புகல் வேண்டி - போர் செய்வதையே விரும்பி; கழிப்பிணிப் பலகையர் - கழிகளாற் பின்னிக் கட்டப்பட்ட கேடயத்தையேந்தி; கதுவாய் வாளர் - வடுவினைச்செய்யும் கூரிய வாயையுடைய வாளேந்தி; குழாம் கொண்ட குருதியம் புலவொடு - கூட்டம் கொண்ட குருதி நாறும் புலால் நாற்றத்துடனே; கழாத்தலையர் - கழுவாத தலையுடையராயுள்ளனர்; கருங்கடை நெடுவேல் - வலிதாய்க் கடையப்பட்ட காம்பினையுடைய நெடுவேலேந்தும்; இன்ன மறவர்த்தாயினும் - இத்தகைய வீரர்களையுடையதெனினும்; அன்னோ - ஐயோ; பன்னல் வேலி பருத்தி வேலி சூழ்ந்த; இப் பணை நல்லூர் - இந்த வளவயல் சூழ்ந்த நல்ல வூர்; என்னாவது கொல் - என்ன வாகுமோ, தெரிந்திலதே; எ - று.
இறுத்தல் இறையென வந்தது. இறை கூர்தல் என்ற தொடர் ஒரு சொல்லாய்த் தங்குதல் என்னும் பொருள் குறித்துநின்றது. கா கலங்கின; தெரு துகள் கெழுமின், வழி மயக்குற்றன, துறை கலக்குற்றன, காவல் கண்ணி வந்த வம்ப வேந்தர் பலர்; தன்னைமார், வேண்டி, வேண்டாராய், பலகையராய், வாளராய், கழாத்தலையராயுள்ளனர்; இன்ன மறவர்த்தாயினும், நல்லூர் என்னாவது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கன்னி மாடத்துச் சுருங்கையாயினும் ஓவிய வேலைப்பாட்டால் மிக்கதென்பார். ஓவுறழ் இரும்புறம் என்றார். ஓவுறழ் இரும்புறம் என்றதற்குக் கதவுநின்றியங்கும் இரும்புறம் எனினுமமையும். சுருங்கை தூம்பு போறலின், அதன் கதவினை ஒவென்றாரென்று கொள்க. இரும்பின் இடையே கைவிரல் நுழைந்து கோத்துப்பிடி இயக்கப்படுவதுபற்றி, கைகவர் இரும்பு எனல் வேண்டிற்று. கைகவர் இரும்பின் இரும்புறம், ஓவுறழ் இரும்புறம் என இயையும். மையல் நோக்கு, காமச் செவ்வி தோன்றியது புலப்படுத்தும் நோக்கமென்றுமாம். தையல், ஒப்பனை செய்யப்டுபவள். கதுவாய் வாள், போரிற் பகைவரைத் தாக்கி வாய் மடிந்த வாள் என்றுரைப்பினுமமையும். வயிரமேறிய மரக்கடையைக் கடைந்த காம்பு கரிதாகலின், இருங்கடை நெடுவே லெனப்பட்டது. வேறலும் தொலைதலும் ஒருவர் பாங்கில் எப்போதும் நிற்பனவல்லவாதலின், இன்ன மறவர்த் தாயினும் என்னாவது கொல் என்றும், போர்விளைவு கருதியிரங்குதலின், அன்னோ என்றும் கூறினார். செல்வம் வேண்டார் என்றதனால், செல்வமுடைமை நிரலுடைமைக்கு உறுப்பாகக் கொள்ளப் படாமை விளங்குகிறது.
விளக்கம்: தையலை நயந்துவந்த வம்ப வேந்தர் பலர்; அவர் வருங்கால் களிறும் மாவும் தேரும் உடன் வருதலால், களிறு முதலியவற்றால் |