பக்கம் எண் :

31

     

212. கோப்பெருஞ் சோழன்

     உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த சோழ வேந்தருள் கோப்பெருஞ்
சோழன் அறிவு நலமும் ஆட்சி நலமும் ஒருங்குடையவன்; மானத்திற்
கவரிமா வனையன்; மற மாண்புகளில் சான்றோர் மெய்ம்மறை. சான்றோர்
சால்பறிந்து அவர் கூட்டுறவு விரும்பியுறைபவன். பிசிராந்தையார் பால்
பேரன்புடையவன். இவன் நெடுங்காலம் ஆட்சி புரிந்தவன். ஒரு கால்
இவனுடைய மக்கள் இவன்பால் பகைத்தீக் கொளுவப் பெற்றுப்
போர்க்கெழுந்தனர். தெருண்டவர் தெருட்டவும் தெருளாது முரணிய
மக்களை ஒறுத்தற் கெண்ணிக் கோப்பெருஞ் சோழனும் போர்க்
கெழுந்தனர்.தெருண்டவர் தெருட்டவும் தெருளாது முரணிய மக்களை
ஒறுத்தற் கெண்ணிக் கோப்பெருஞ் சோழனும் போர்க் கெழுந்தான். அது
கண்ட சான்றோரான புல்லாற்றூர் எயிற்றியனாரென்பார் கோப்பெருஞ்
சோழன் மனங்கொள்ளத் தக்க நல்லுரைகளை எடுத்தோதி அவனைப்
போரைக் கைவிடுமாறு செய்தார். முடிவில் அவன் மானம் பொறாது
வடக்கிருந்து உயிர்துறந்தான். அக்காலத்தே இவனுடனே உயிர்துறந்த
சான்றோர் பலர். கேள்விமாத்திரையே பெருநட்புக் கொண்டிருந்த
பிசிராந்தையார் இவன் வடக்கிருந்து உயிர் துறந்து நடுகல்லாயின பின்
போந்து தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார். இவர் காலத்தே இவன்
நட்புச் சுற்றமாயிருந்த சான்றோர் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்,
நத்தத்தனார், புல்லாற்றூர் எயிற்றியனார், பிசிராந்தையார் முதலியோராவர்.

    பிசிராந்தையார் பாண்டிநாட்டுப் பிசிரென்னும் ஊரில் இருந்து
வருகையில், கோப்பெருஞ்சோழனுடைய அறிவு நலமும் ஆட்சி நலமும்
கேள்வியுற்று, அவன்பாற் பெருங் காதல் கொண்டொழுகினார். பாண்டி
நாட்லிருந்தது அவருடல் எனினும், அவரது உயிர் உறையூரிலிருந்த
கோப்பெருஞ் சோழனையே சூழ்ந்து கொண்டிருந்தது. பிசிர் இப்போது
பிசிர்க் குடியென வழங்குகிறது. அவரது நினைவுமுற்றும் சோழன்பால்
ஒன்றியிருந் தமையின், யாவரேனும் நம்முடைய வேந்தன் யாவன் என்று
கேட்பின், “எம் வேந்தன் கோப்பெருஞ் சோழன். அவன் உரையூரில்
பொத்தியாரென்னும் புலவர் பெருந்தகையுடன் இனிதிருக்கின்றான்” என்று
கூறுவர். இவ்வாறு பன்முறையும் கூறிப் பயின்ற அக்கூற்று இப் பாட்டாய்
உருக்கொண்டு நிற்கின்றது.

 நுங்கோ யாரென வினவி னெங்கோக்
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம் வீடவாரா
ஆரற் கொழுஞ்சூ டங்கவு ளடாஅ
5வைகுதொழின் மடியு மடியா விழவின்
 யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
பொத்தி னண்பிற் பொத்தியொடு கெழீஇ
10வாயார் பெருநகை வைகலு நக்கே.

     திணை: அது. துறை: இயன்மொழி. கோப்பெருஞ் சோழனைப்
பிசிராந்தையார் பாடியது.