பக்கம் எண் :

354

     

கட்டிக்கொண்டான். தலையில் நாரால் தொடுக்கப்பட்ட பூமாலையை
யணிந்தான். சோறு சமைக்கும் மட்பானையைத் தோளிற் கொண்டான்.
தான் இருந்த மன்றத்தின்கண் நின்ற வேம்பின் பூ மழைத்துளி போல்
உதிர, அவ்விடத்தினின்றும் நீங்காமல், வேறு இன்றியமையாது செய்தற்குரிய
செயலையும் செய்ய விரும்பாது பொருளே விரும்பிய வுள்ளத்தனாய்
நெடுஞ்செழியன் இருக்கும்போர்க்களம் நாடி வழிகள் பல கடந்து சென்று
அவனைக்கண்டு, “வில்லேருழவின் நின்நல்லிசையுள்ளி, நின்பாற் பெறலாகும்
புகர்முக முகவைக்கு வந்தேன்” என்று கூறுகின்றான். இப்பாட்டின் இடையே
சில அடிகள் சிதைந்து விட்டன.கிடைத்த ஏடுகளில் அவை காணப்படவில்லை.

 அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது
மரந்தலைச் சேர்ந்து பட்டினி வைகிப்
போதவி ழலரி நாரிற றொடுத்துத்
தயங்கிரும் பித்தை பொலியச் சூடிப்
 5. பறையொடு தகைத்த கலப்பையென் முடிவுவாய்
 ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
மன்ற வேம்பி னொண்பூ வுறைப்பக்
குறைசெயல் வேண்டா நசைய விருக்கையேன்
அரிசி யின்மையி னாரிடை நீந்திக்
 10.கூர்வா யிரும்படை நீரின் மிளிர்ப்ப
 வருகணை வாளி.................
..................அன்பின்றுதலைஇ
இரைமுரை சார்க்கு முரைசால் பாசறை
வில்லே ருழவினின் னல்லிசை யுள்ளிக்
15. குறைத்தலைப் படுபிண னெதிரப் போர்பழித்
 தியானை பெருத்தின் வாண்மட லோச்சி
அதரி திரித்த வாளுகு கடாவின்
மதியத் தன்னவென் விசியுறு தடாரி
அகன்க ணதிர வாகுளி தொடாலிற்
 20.பணைமரு ணெடுந்தாட் பல்பிணர்த் தடக்கைப்
 புகர்முக முகவைக்கு வந்திசிற் பெரும
களிற்றக்கோட் டன்ன வாலெயி றழுத்தி
விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள்
குடர்த்தலை மாலை சூடி யுணத்தின
 25.ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து
 வயங்குபன் மீனினும் வாழியர் பலவென்
உருகெழு பேய்மக ளயரக்
குருதித்துக ளாடிய களங்கிழ வோயே.

     திணையும்  துறையு  மவை.  தலையாலங்கானத்துச்   செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.