| உரை: கவைக்கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் - கவர்ந்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும்; தாதெரு மறுகில் போதொடு பொதுளிய வேளை வெண்பூ - தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த வேளையினது வெள்ளிய பூவை; வெண் தயிர்க்கொணீஇ - வெள்ளிய தயிரின்கட்பெய்து; ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை - இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும்; அவரைகொய்யுநர் ஆரமாந்தும் - அவரை கொய்வார் நிறையவுண்ணும், தென்னம்பொருப்பன்நன்னாட்டுள்ளும் - தென்றிசைக்கண்பொதியின் மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டினுள்ளும்; பிசிரோன் என்ப - சேய்த்தாகிய பிசிரென்னும் ஊரிடத்தானென்று சொல்லுவர்; என்உயிரோம்புநன் - என்னுயிரைப் பாதுகாப்போனை; செல்வக்காலை நிற்பினும் - அவன் எமக்குச்செல்வ முடைய காலத்து நிற்னினும்; அல்லற்காலை நில்லலன்- யாம்இன்னாமை யுறுங் காலத்து ஆண்டு நில்லான்; எ - று.
மன், அசைநிலை.
விளக்கம்: அவைப்பு. குற்றுதல். இதைப்புன வரகின் அவைப்பு மாண் அரிசி (அகம். 394) என்று பிறரும் கூறுதலால், வரகரிசிக்கு நன்கு குற்றுதல் மாண்பாதால் காண்க. மறுகென்றது ஆகுபெயரால் அதனையடுத்துள்ள சிறையிடத்தின் மேற்று. சிறையைச் சிறகம் எனவும் வழங்குவர். வேளைப்பூவை உப்பிட்டு வேகவைத்து வெள்ளிய தயிர் கலந்து நன்கு பிசைந்து மிளகுத்தூளிட்டுத் தாளிதம் செய்யப்பட்ட புளிங்கூழ் ஈண்டு அம்புளி மிதவை யெனப்பட்டது. மிக்க வுடலுழைப் பில்லாரும் நிறைய வுண்பரென்றற்கு அவரை கொய்யுநர் ஆர மாந்தும் என்றார். தென்னம் பொருப்பு, பொதியின்மலை. பிசிர் மதுரை நகரினின்றும் தொலைவில் இருப்பது தோன்ற நாட்டினுள்ளும் சேய்த்தாகிய என்று உரைத்தார். என்னுயிர் ஓம்புநன் என்று பிசிராந்தையாரைக் கூறினான், சோழன் இறந்தபின்பு தானும் அவன் பின்னே உயிர் துறக்கும் அவரது துணிவு நினைந்து; இதனையுட்கொண்டே, உரைகாரரும் உயிர் ஓம்புநன் என்றதற்கு உயிரைப் பாதுகாப்போன் என்று உரைத்தார். மன்னைச் சொற்குரிய ஏனைப் பொருள்களைக் கொள்ளாது அசைநிலைப் பொருளே கொள்க என்பாராய், மன் அசைநிலை யென்றார். உயிரோம்புதற்குச் செல்வக் காலையினும் அல்லற்காலமே ஏற்ற காலமாதலின், அக்காலமே நோக்கியிருக்கும் அவர் வாராதொழியாரரென்பான், அல்லற்காலை நில்லலன் என்றான். ---
216. கோப்பெருஞ் சோழன்
வேந்தே!பிசிராந்தையார் நின்னைக் கேள்விப்பட்டிருக்கின்றா ரேயன்றி நேரில் கண்டதிலர்; பல யாண்டுகளாகப் பழகிய நண்பராயினும், நேரில் வருவது அரிது; நட்புநெறியில் திரியாது ஒழுகுவதும் அரிது; என்று சான்றோர், சோழன் ஆந்தையாரை நினைந்து மனங் கவலாவாறு கூறினர். அதுகேட்ட சோழன், அறிஞர்களே! நீவிர் இவ்வாறு ஐயங்கொள்ளல் வேண்டா; |