பக்கம் எண் :

430

     

கூறுவது காண்க. நெல்லாகிய பெருவளம் பெற்றவை என இயையும். திருந்தா
மூரி - திருந்தாத  வூன்:  அதனைத்  திருத்துமாறு  கூறுவார், “பரந்துபடக்
கொண்டி” யென்றார்,  மூரி,  ஊன்; “வெண்ணிண மூரி”  (புறம். 93) என்பது
காண்க.  வேங்கட  வரைப்பாகிய  வடபுலம் என இயைக்க. எழிலிஇசைக்கும்
விண்டு. பிறங்கால் நெல்லின் பெருவளம் பெற்ற கெண்டி உண்டு இனிதுவக்கும்
வேங்கட வரைப் பின் வடபுலம் என இயையும். வறமுண்டாகியவழி மக்கட்குப்
பசிப்பிணி  நின்று  வருத்தம் பயக்குமாகலின் “பசி்த்தென” என்றார்; தீர்கை,
நீங்குதல்.   தீர்கை   விடுக்கும்  பண்பினவாகிய  முதுகுடியென  இயைத்து
“வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும்” (குறள். 95) நீங்காத பண்பினையுடைய
பழங்குடி யென்றுரைத்தலுமாம். நின் வள்ளம்மையையும் என் இன்மையையும்
நன்குணர்ந்த  சான்றோர்  கூறக்கேட்டு  நின்பால்  வந்துள்ளேன் என்பார்,
“நின்னுணர்ந்தறியுந ரென்றுணர்ந்து கூறக்காண்கு வந்திசின் பெரும்” என்றார்.
புதாவை ஒருவகை நாரை என்பர். இலையும் பூவும் செறிந்து கண்ணுக்கினிய
காட்சி வழங்கும் புன்னை “ததைந்தபுன்னை” யெனப்பட்டது. நாட்டில் பசியும்
பிணியும்  பகையும் இல்வழியே வேந்தர்க்கு இன்றுயில் எய்துதலின், அப் பசி
முதலாயின இலவாகுக என்பார் “இன்றுயில் பெறுகதில் நீயே” என்றார். என்றது
யானும் வேண்டுவன் பெற்று ஒக்கலுடன் இனிது வாழ்வேனாக என்றவாறாம்.
வேலியாயிரம் விளைக நின்வயல் என்றது, பகுத்துண்டு பல்லுயிரோம்பும்
நல்லறம் நெடிது நிலவற்கு. வடபுலம் பசித்தென. இறுத்த ஒக்கல், வினவலின்
என, உணர்ந்து கூற, காண்கு வந்திசின; பெரும, வரைப்பின் வெய்யோளொடு
இன்றுயில் பெறுக. துளிபொழிய, வயல் விளைக எனக்கூட்டி வினைமுடிவு
செய்க. தில்: விழைவின்கண் வந்தது.

     விளக்கம்: கடைநிலையாவது “கடற்படை” (புறம். 382) எனத் தொடங்கும்
பாட்டின்  உரை  விளக்கத்தின்கட்   கூறப்பட்டது. இப்பாட்டின்கண் ஆசிரியர்
கல்லாடனார்    வேங்கடநாட்டின்    பொது    வியல்பை    எடுத்துரைத்து,
அந்நாட்டினின்றும் தாம் ஒக்கலுடன் பொறையாற்றுக்கு வரநேர்ந்த காரணத்தை,
“வேங்கடவரைப்பின்    வடபுலம்    பசித்தென,    ஈங்குவந்திறுத்த   என்
இரும்பேரொக்கல்”  என்று  குறித்துள்ளார்.  இன்றும்  வடபுலம்  பசித்தெனப்
பல்லாயிர  மக்கள் சோழநாட்டில் வந்து தங்கியிருப்பது கல்லாடனார் கூற்றை
வற்புறுத்துகிறது.  பொறையாற்று  வாழ்நர்,  வடபுலத்தினின்றும்  வந்திருக்கும்
தம்முடைய ஒக்கலை உண்டியும் உறையுளுந் தநது இனிது பேணிப் புரப்பதால்
அவர்கள்  தங்கள்  வடபுலத்தை  நினைந்து  செல்லுங்கருத்தே இலராயினர்
என்பதுபட,   “தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி”   என்று  குறிக்கின்றார்.
நின்னையும்  என்னையும்  நன்குணர்ந்த சான்றோர் என்வருகையை நினக்கு
அறிவித்தாராக.  அதுவே பற்றுக்கோடாக யான் நின்னைக் காணவந்தேன்:
எனக்கு வேண்டுவன தந்து யான் சென்று இனிதிருத்தற்கு அருளுவாயாக என
நேர்நின்று நாவாற் கூறமாட்டாராய், “செழுநகர் வரைப்பில் நெஞ்சமா காதல்
நின்வெய்யோளொடு இன்றுயில் பெறுகதில் நீயே”  என்றும்,  “வேலியாயிரம்
விளைகநின் வயலே”  என்றும்  கூறுகின்றார்.  இக்குறிப்பறிந்த பொறையாற்று
கிழான் வறுமை நோய் கொண்டு வருந்தாவண்ணம் பெருவளன் நல்கி அவரைச்
சிறப்பித்தானென்பது பெறப்படுகிறது.

---