திணையும் துறையு மவை. அதியமான் மகன் பொகுட் டெழினியை ஒளவையார் பாடியது.
உரை: மதியேர் வெண்குடை அதியர் கோமான் - முழுமதி போன்ற வெண்கொற்றக் குடையை யுடைய அதியர் வேந்தனான்; கொடும்பூண் எழினி - வளைந்த மாலை யணிந்த எழினியினுடைய; நெடுங்கடை யான் நின்று - பெருமனையின் நெடிய முற்றத்திலே யான் நின்று; பசலை நிலவின் பனிபடு விடியல் - இள நிலவு திகழும் பனி சொரியும் விடியற்காலத்தே; பொருகளிற்று அடிவழி யன்ன - போர்யானையின் அடிச்சுவடுபோல் வட்டமான; என் கை ஒருகண் மாக்கிணை ஒற்றுபு - என் கையிலிருந்த ஒரு கண் மாக்கிணையை யறைந்து; கொடாஅ உருகெழு மன்னர் ஆரெயில் கடந்து - திறை கொடாத உட்குப் பொருந்திய மன்னருடைய அரிய மதிலை வஞ்சியாது பொருதழித்து; நிணம்படு குருதி பெரும்பாட் டீரத்து - தசையும் குருதியுந் தோய்ந்த கெருக்கா லுண்டாகிய ஈரம் பொருந்திய; அணங்குடை மரபின் இருங்களந்தோறும் - துன்பந்தரும் தெய்வங்களுறையும் முறைமையினையுடைய பெரிய போர்க்களந்தோறும்; வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி - வெள்ளி வாயையுடைய கழுதையாகிய புல்லிய நிரையைப் பூட்டியுழுது; வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் - கவடியும் குடைவேலும் வேந்தே; வைகல் உழவ - இடையறாத போராகிய உழவைச் செய்யும் வேந்தே; பெரிது வாழிய என - நீ நெடிது வாழ்வாயாக என்று பாடிக் கொண்டு; சென்று யான் நின்றனென் ஆக - சென்று யான் அவன் முற்றத்தே நின்றேனாக; அன்றே - அப்பொழுதே; ஊருண்கேணிப் பகட்டிலைப் பாசிவோர் புரை சிதாஅர் நீக்கி - ஊரவர் நீர்கொள்ளும் கேணியிற் படர்ந்த பெரிய இலையையுடைய பாசியினது வேர்போற் கிழிந்த உடையைக் களைந்துவிட்டு; நேர்கரை நுண்ணூற் கலிங்கம் உடீஇ - நேரிய கரையை யுடைய நுண்ணிய நூலானியன்ற உடையைத் தந்து உடுப்பித்து; உண்மென - உண்மினென்று; தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் - தேளினது கடுப்புப்போல் நாள்படப் புளிப்பேறிய கள்ளை; கோள்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ -கோளாகிய மீன் போன்ற பொன்வள்ளத்திற் பெய்து; ஊண்முறை ஈத்தல் அன்றியும் - உண்ணும் முறைப்படி அளிப்பதன்றி; கோள்முறை விருந்து இறை நல்கியோன் - கொள்வார் கொள்ளும் முறையில் விருந்தாய் எம்மை இருத்தி யுண்பித்தான்; அந்த ரத்து - கடற்கு அப்புறத்ததாயுள்ள நாட்டிலுள்ள; அரும் பெறல் அமிழ்தம் அன்ன- பெறற்கரிய அமுதம்போன்ற; கரும்பு இவண் தந்தோன் - கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய; பெரும் பிறங்கடை - பெரிய வழித்தோன்றல் எ - று. |