| இரண்டாகி யடங்குமென்றறிக. உள்ளியதனால் ஒக்கல் பிறரை இரத்தலைக் கைவிட்டு ஈர்ங்கை மறப்பதாயிற்று. கிழித்தெனற்பாலது கிழிப்ப வென வந்தது. கிழித்தல், சூட்டிக்கோலாற் குத்திச் சுட்டுத் துண்டாக்குதல். பருத்திவீடு, பருத்தினின்றும் எடுத்துக்கொட்டை நீக்கிச் சுகிரப்பட்ட பஞ்சு. பருத்தியினின்றும் விடுபட்டது பருத்தி வீடாயிற்று. முட்டையீன்ற பாம்பின் நா பெரிதும் பாம்பு பிளவுபட்டுக் காட்டுமென்ப. ஈனுதற்குரிய நாளெய்திய போதே நம்பி முட்டையீனும் என்பார், நாளுறவீன்ற வரவு என்றார். நாளுற்று நம்பி பிறந்தான் (சீவக. 10.) என்று பிறரும் கூறுதல் காண்க. செல்வமில்வழி யெய்தும் வறுமைத் துன்பத்தை நன்கு கண்டிருக்கின்றானாதலின், செல்வமும் கேடின்றி நல்குமதி யென வேண்டினான். மதிக்கு மாசு, கலை குறைவு. ஆடுகள் ஆடியொல்குவது போலக் கோடையில் எப்பொருளும் வாடி வதங்குமென வறிக. இடையறாத நீரொழுக்குடையதாகலின், காவிரியைக், கோடா வொழுக்கத்துக் காவிரி என்றார். வளவன் நல்கியவழித்தான் செய்யக் கூடியது இது வென்பான், வளவன் வாழ்கெனப் பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே என்றான். வீதலின், வருந்தி, உள்ளமொடு, நசைதுணையாக, ஒருபாற்பட்டென, உள்ளி, மறந்த என் ஓக்கல், கிழித்து, அருளி, நீக்கி, உடீஇ, நல்குமதி, பெரும, தெளிர்ப்ப ஒற்றி, பொருந. வாழ்கெனப் பாடுகம் பலவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனபை் பாடித் தமக்குப் பரிசில் நல்கிவிடுத்தல் வேண்டுமென்ற கருத்தை அவனுக்குத் தெரிவிக்கும் கருத்துடையரான நல்லிறையனார், கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துத் தாமுற்று வருந்திய வருத்தத்தையும் தமக்கு வேண்டும் பரிசில் நிலையையும் இப் பாட்டின்கட் கூறுகின்றார். முன்பெல்லாங் கண்டீராத வறுமையுண்டாக, அதனால் அறிவு மழுங்கிக் கடனறியாளர் இருக்குமிடம் நாடிச்சென்று அவ்ர குடி தோறும் சென்று இரந்து வருந்திய வருத்தத்தை பதிமுதற் பழகா...இன்மையின் என்றார். தம் வறுமைதீரக் கொடுக்கும் செல்வர்களைப் பிறநாடுகளில் தேடியலைந்ததும், குடிதொறும் சென்று இரந்து வருந்தியதும் தோன்றக் கடனறியாளர் பிறநாட்டின் மையின் என்றும் குடிமுறை பாடி யொய்யென வருந்தி யென்றும் குறித்தார். கிள்ளி வளவனது கொடைநலம் கேள்வியுற்று அவன் பால் தாம்வருந்தித் திரிதலைக் குறிப்பாராய், வள்ளன்மையின்-உள்ளி வந்தனன் என்று கூறுகின்றார். வள்ளன்மை யில்வழி, இரவலரை வரைந்து வரவேற்று உடையும் உண்டியும் நல்கிப் புரக்கும் செந்தண்மையுளதாகாமையின், வள்ளன்மையின் எம் வரைவோர் யாரென இறையனாரது உள்ளம் உள்ளுவதாயிற்று. கரவாத உள்ளமுடையாரிடத்தில் இரத்தலே இரவர்க்கு இன்பமும் எழுச்சியும் தருவதாகலின் வள்ளியோரை நாடுவது இயல் பாயிற்று. இனிய வுணவும், அகன்று மடி கலிங்கமும் தரல்வேண்டுமெனக் குறித்தவர் மீள அளவை குறித்து இரத்தலாகிய செயலை மேற் கொள்ளாவாறு மிகுதியாக நல்குக வென்பாராய்ச் செல்வமும் கேடின்று நல்குமதி பெரும என்றும், இதற்குக் கைம்மாறாக யாம்செய்யத் தக்கதொன்று மில்லையாயினும், தளர்ச்சியின்றி நின் பீடுகெழு நோன்றாள் நாடெங்கும் விளங்குமாறு பாடுவோம் என்பார், மாசில்...பலவே என்றும் குறிக்கின்றார். --- |