| | கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும் மலைகெழு நாட மாவண் பாரி கலந்த கேண்மைக் கொவ்வாய் நீயெற் | 5 | புலந்தனை யாகுவை புரந்த யாண்டே | | பெருந்தகு சிறப்பி னட்பிற் கொல்லா தொருங்குவரல் விடாஅ தொழிகெனக் கூறி இனையை யாதலி னினக்கு மற்றியான் மேயினே னன்மை யானே யாயினும் | 10 | இம்மை போலக் காட்டி யும்மை | | இடையில் காட்சி நின்னோ டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே. |
திணை: அது. துறை: கையறுநிலை. வேள்பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது.
உரை: கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் முசுக்கலை கழித்துண்டலாற் பீறிய முழவுபோலும் பெரிய பலாப் பழம்; சிலைகெழு குறவர்க்கு அல்கு மிசைவாகும் - வில்லையுடைய குறவர்க்கு அதன் பெருமையால் சில நாளைக்கு இட்டுவைத்துண்ணும் உணவாம்; மலைகெழு நாட - மலையையுடைய நாட்டையுடையோய்; மாவண் பாரி - பெரிய வண்மையுடைய பாரி; கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் - நீயும் யானும் கலந்து நட்பிற்குப் பொருந்த ஒழுகாயாய்; நீ என் புலந்தனையாகுவை - நீ யென்னை வெறுத்தாயாகக் கடவை; புரந்த யாண்டு - நீ எனக்கு உதவி செய்த யாண்டுகளும்; பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது - பெருமைதக்க தலைமையினையுடைய நட்பிற்குப் பொருந்தாமல்; ஒருங்கு வரல் விடாது - யானும் நின்னோடுகூடப் போதுதற்கு இயையாது; ஒழிக எனக் கூறி - நீ ஈண்டுத் தவிர்க எனச் சொல்லி; இனையை யாதலின் - இப்படி வேறுபட்ட தன்மையையுடைய யாதலின்; நினக்கு யான் மேயினேன் அன்மையான் - நினக்கு யான் பொருந்தினே னல்லாமையான்; ஆயினும் - இங்ஙனம் பொருந்திற்றிலேனாயினும்; இம்மை போலக் காட்டி - இப்பிறப்பின்கண் நீயும் யானும் கூடி இன்புற்றிருந்தவாறு போலக் காட்டி; உம்மை - மறுபிறப்பினும்; இடையில் காட்சி நின்னோடு - இடைவிடாத காட்சியினையுடைய நின்னோடு; உடனுறைவு உயர்ந்த பால் ஆக்குக - கூடி வாழ்தலை உயர்ந்த விதி கூட்டுவதாக; எ - று.
உலந்த யாண்டு என்று பாடமாயின், கழிந்த யாண்டு என்க. மற்று: அசைநிலை. |