பக்கம் எண் :

79

     
 கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும்
மலைகெழு நாட மாவண் பாரி
கலந்த கேண்மைக் கொவ்வாய் நீயெற்
5புலந்தனை யாகுவை புரந்த யாண்டே
 பெருந்தகு சிறப்பி னட்பிற் கொல்லா
தொருங்குவரல் விடாஅ தொழிகெனக் கூறி
இனையை யாதலி னினக்கு மற்றியான்
மேயினே னன்மை யானே யாயினும்
10இம்மை போலக் காட்டி யும்மை
 இடையில் காட்சி நின்னோ
டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே.

   திணை: அது. துறை: கையறுநிலை. வேள்பாரி துஞ்சியவழி,
அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது.

    உரை: கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் முசுக்கலை
கழித்துண்டலாற் பீறிய முழவுபோலும் பெரிய பலாப் பழம்; சிலைகெழு
குறவர்க்கு அல்கு மிசைவாகும் - வில்லையுடைய குறவர்க்கு அதன்
பெருமையால் சில நாளைக்கு இட்டுவைத்துண்ணும் உணவாம்; மலைகெழு
நாட - மலையையுடைய நாட்டையுடையோய்; மாவண் பாரி - பெரிய
வண்மையுடைய பாரி; கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் - நீயும் யானும்
கலந்து நட்பிற்குப் பொருந்த ஒழுகாயாய்; நீ என் புலந்தனையாகுவை - நீ
யென்னை வெறுத்தாயாகக் கடவை; புரந்த யாண்டு - நீ எனக்கு உதவி
செய்த யாண்டுகளும்; பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது -
பெருமைதக்க தலைமையினையுடைய நட்பிற்குப் பொருந்தாமல்; ஒருங்கு
வரல் விடாது - யானும் நின்னோடுகூடப் போதுதற்கு இயையாது; ஒழிக
எனக் கூறி - நீ ஈண்டுத் தவிர்க எனச் சொல்லி; இனையை யாதலின் -
இப்படி வேறுபட்ட தன்மையையுடைய யாதலின்; நினக்கு யான் மேயினேன்
அன்மையான் - நினக்கு யான் பொருந்தினே னல்லாமையான்; ஆயினும் -
இங்ஙனம் பொருந்திற்றிலேனாயினும்; இம்மை போலக் காட்டி -
இப்பிறப்பின்கண் நீயும் யானும் கூடி இன்புற்றிருந்தவாறு போலக் காட்டி;
உம்மை - மறுபிறப்பினும்; இடையில் காட்சி நின்னோடு - இடைவிடாத
காட்சியினையுடைய நின்னோடு; உடனுறைவு உயர்ந்த பால் ஆக்குக -
கூடி வாழ்தலை உயர்ந்த விதி கூட்டுவதாக; எ - று.


    உலந்த யாண்டு என்று பாடமாயின், கழிந்த யாண்டு என்க. மற்று:
அசைநிலை.