| படியும் நீர்த்துறைக்கட் பூத்திருப்பினும், பெரிதாயும் நிறைந்ததாயும் இருப்பினும் அதன் பூ எவர்க்கும் பயன்படா தென்றற்குப் பனித்துறைப் பகன்றை யென்றும், நறைக்கொண் மாமல ரென்றும் மிகுத்துக் கூறினார். காஞ்சித் திணைக்குரிய துறைகளுள், இன்னனென் றிரங்கிய மன்னை யென்ற துறைக்கு இப்பாட்டு முழுதையும் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத். 19) இளம்பூரணர். ஈயாது வீயும் உயிர் என்ற வழி, உயிரென்பது உடம்பொடு கூடிநிற்கும் மக்களையேயாயினும், உடம்பின் தொடர் பாலுண்டாகும் ஈத்துவக்கும் இன்பமும். ஈகையாலுளதாகும் புகழும் அறியாமையின் வாளா உயிர் என்றார். தோன்றலின் தோன்றாமை நன்று (குறள். 236) என்றதற்குப் பரிமேலழகர் கூறும் உரை ஈண்டு நினைவுகூரத்தக்கது. ---
236. வேள்பாரி வேள்பாரி இறந்தபின் அவன் மகளிர் இருவரையும் அந்தணராகிய கபிலர் வேந்தர் சிலரிடம் கொண்டு சென்று மணம் புரிவிக்க முயன்றனர். அவர் முயற்சி பயன்படவில்லை. முடிவில் மலையமான் நாட்டுத் தலை நகராகிய திருக்கோவலூரை யடைந்து அம் மகளிரை அவ்வூர்ப் பார்ப்பாரிடத்தே அடைக்கலமாகத் தந்தனர். பார்ப்பனரிடையுள்ள பொருட்கும் உயிர்கட்கும் பிறர் எவரும் தீங்கு செய்தலாகாது என்பது அந்நாளைய முறை. பிறர்பால் மகட்கொடை வேண்டிச் செல்வதும், மகள் மறுத்தால் அது குறித்துப் போர்தொடுத்து உடற்றுவதும் பண்டையோர் மரபு; ஆயினும், பார்ப்பாரிடம் மகட்கொடை விழைவதும் அதுவே வாயிலாகப் போர் மேற்கொள்வதும் இல்லை. இதனை ஆசிரியர் கபிலர் நன்கறிந்தவராதலாற்றான், பாரி மகளிரைப் பார்ப்பாரிடத்தே அடைக்கலப் படுத்தார். அவர்கட்கு ஒரு தீங்கும் உண்டாகாதென வுணர்ந்த கபிலருக்குப் பெருஞ்சுமை நீங்குவதாயிற்று. வேள் பாரியின் உயிர்த் துணைவராதலின், அவனையில்லாத இந்நிலவுலகு அவர்க்கு உயிரிலாத உடல் போலப் பொலிவிழந்து தோன்றிற்று. பாரியை நினைந்து நினைந்து அவர் தம் தூய நெஞ்சு துயரத்தால் புண்பட்டது. இனி வடக்கிருத்தலை மேற்கொண்டு உண்ணா நோன்பால் உயிர் துறந்து மறுமையுலகில் அவனைக் கண்டு கூடிப் பண்டேபோல் நட்புக்கிழமையால் நல்வாழ்வு வாழ்தல் வேண்டுமென அவர் எண்ணினார். தென் பெண்ணையின் நட்டாற்றுத் துருத்தியில் ஓரிடங்கண்டு வடக்கிருக்கலானார். இன்றும் கோவலூர்க்கருகில் தென் பெண்ணை யாற்றில் கபிலக்கல்லென ஒரு கல்லிருந்து கபிலர் வடக்கிருந்த செய்தியை நிலைவுறுத்துக் கொண்டு நிற்கிறது. அக்காலை அவர், வேள் பாரியை மனக்கண்ணிற்கண்டு, மாவண் பாரி, என்னை நீ பல யாண்டுகள் பேணிப் பாதுகாத்தாய்; அக்காலமெல்லாம் நீ என்னோடு உயிர்கலந்தொன்றிய கேண்மையுடையனாய் ஒழுகினாய்; ஆயினும், நீ இவ்வுலகினின்றும் பிரியுங்கால், என்னையும் உன்னோடு உடன்வரவிடாது இருந்து வருக எனக் கூறிப் பிரிந்தாய்; இதனால் நீ என்பால் வேறு பட்டாய் போலும்; யான் நினக்குப் பொருந்தாதவன் போலும்; எவ்வாறாயினும் ஆகுக; இனி, இப் பிறப்பில் நம்மிருவரையும் கூட்டி ஒன்றிய நட்பால் உயர் வாழ்வு வாழச்செய்த நல்லூழ், மறுமையிலும் நின்னோடு உடனுறையும் வாழ்வை நல்குவதாக என்று மொழிந்தார். அம் மொழியே இப்பாட்டு. |