பக்கம் எண் :

8

     

203. சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானால்
இளஞ்சேட் சென்னி

     இவ்விளஞ்சேட்   சென்னியைச்   சேரமான்பாமுளூர் எறிந்த
இவ்விளஞ்சேட்   சென்னியென்றும், நெய்தலங்கானல் இளஞ்சேட்
சென்னியென்றும், செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி யென்றும்
கூறுவர்.நெய்தலங்கானல்   இவன் பிறந்தவூர் என்றும்,
இளஞ்சேட்சென்னியென்பது இவற்குப் பெயரென்றும், செருப்பாழி
சோழர்க்குரிய தென்றும் பாமுளூர் சேரமான்களுக்குரியதென்றும் முன்பு
கூறினாம்; செருப்பாழியைச் சேரர்க்குரியதெனக் கருதுவதும் உண்டு. இச்
சென்னி தன்னொடு பகைத்துப் பொருதசேரமன்னனை அவற்குரிய
பாமுளூரிடத்தே எதிர்த்துப் பொருது வெற்றி பெற்றிருக்கையில் இவனைச்
சான்றோராகிய ஊன்பொதி பசுங்குடையார் சென்று கண்டார்.
நெய்தலங்கானலில் தான்இருக்கும்போதே இவர் தன்பாற்போந்து அறிவுரை
வழங்கிச்சிறப்பித்ததைப் பாராட்டிப் பெரும்பரிசில் நல்கினானாயினும். இச்
சோழன், போரில் உழந்த வருத்தத்தால் தான் நல்க இருந்தபரிசிலை
நீட்டித்துத் தந்தான். அதனால் பரிசிலர் கூட்டத்துக்கும் சிறிது
அசைவுண்டாயிற்று. ஊன்பொதி பசுங்குடையார் அவனை நன்கறிவாராயினும்,
ஏனைப் பரிசிலரும் பிறரும் அறியாராகலின் அவர் வேறுபட
நினைப்பதனைச் சோழற்குத் தெரிவிக்க எண்ணினார். மேலும், “முன்னே
தன்பாற் பரிசில் பெற்றவர்களாதலின் அவர்கள் சிறிது தாழ்த்துப்பெற்றுப்
போகலாமெனும் கருத்துடையனானான் என்பதையும் ஊன் பொதி
பசுங்குடையார் அறிந்து கொண்டார். அக் கருத்து நன்றன்றென்பதையும்
சோழற்கு அறிவுறுத்த வேண்டிய கடமையுடையரானார். சோழனைக்
காண்டற்கு வேண்டும் செவ்வி பெற்றதும், பரிசிற்றுறையாகத் தாம் பாடிய
இப் பாட்டைப் பாடிக்காட்டினார். இதன்கண், முன்னே நல்ல மழையைப்
பெய்தேமென நினைந்து மழை இப்போது பெய்யா தொழியுமாயின்
விளைநிலங்களும் தாம் முன்னே நிறைய விளைந்தேமென்று இப்போது
விளையாது போமாயின் எவ்வுயிருக்கும் இவ்வுலகில்உயிர்
வாழ்க்கையில்லையாகும்; முன்னேயும் நீநிறையத்தந்தனை யாதலின்
இப்போதும் அவ்வாறே தருகு எனஎம்போலும் பரிசிலர் நின்னை இரப்பர்;
இரப்பராயின், நீர்முன்னர் நிறையக் கொண்டீராதலின் இப்போது வறிதே
சென்மின்என்று சொல்லி நின்போல்வார் மறுப்பாராயின் அது
மிகக்கொடிதாகும். தங்களை நாடிவரும் இரவலர்க்கு வறுமையால் ஒன்றும்
கொடுத்தற்கியலாது அவர் முகம் காண்பதற்கு அஞ்சிநாணி முகமறைந்து
வருந்தும் தன்மையுடையோர் இனத்தைச்சேர்பவன் நீ அல்லை. பகைவரை
வென்று கொள்ளா முன்பேஅவர் அரணை நினதாகக் கொண்டு அதனைப்
பரிசிலர்க்குவழங்கும் பேராண்மையுடைய நீ இரவலரைப் புரத்தல் நினக்கு
மேற்கோடற்குரிய சீரிய கடமையாம் என வற்புறுத்தியுள்ளார்.

 கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளங் கரப்பினும்
எல்லா வுயிர்க்கு மில்லால் வாழ்க்கை
இன்னுந் தம்மென வெம்மனோ ரிரப்பின்
5முன்னுங் கொண்டிரென நும்மனோர் மறுத்தல்
 இன்னா தம்ம வியறே ரண்ணல்