பக்கம் எண் :

இன்பத்துப் பால்
களவியல்

அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்

அஃதாவது , தலைமகன் தலைமகள் அழகைப் பாராட்டிக் கூறுதல் . இது புணர்ச்சியின்பம் பெற்ற பின்பு அளவில்லா மகிழ்ச்சியொடும் அடக்க வொண்ணா வுணர்ச்சியொடும் நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தலின் பின் வைக்கப்பட்டது .

 

நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு
மென்னீரள் யாம்வீழ் பவள் .

 

[ இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கட் சொல்லியது ]

அனிச்சமே நன்னீரை - அனிச்சப் பூவே ! நீ மோப்பக் குழையும் நாணமுடைமையால் மற்றெல்லாப் பூவினும் நல்ல தன்மையை யுடையை ; வாழி - ஆதலால் நீ நீடுவாழ்க ! யாம் வீழ்பவள் நின்னினும் மெல்நீராள் - ஆனால் , எம்மால் விரும்பப் பட்டவளோ உன்னைவிட மெல்லிய தன்மையுடையவள் . இதை இன்றறிந்துகொள் .

இது காமவின்ப மகிழ்ச்சி மயக்கத்தால் , கேட்குந போலவுங்கிளக்குந போலவும் அஃறிணை மருங்கின் அறைந்தது . இதுபோற் பின் வருவனவற்றிறகும் ஈதொக்கும் . ' அனிச்சம் ' ஆகுபெயர் . இவ்வுலகில் யானே மென்மையிற் சிறந்தேன் என்னும் செருக்கையினி யொழிவாயாக என்பது குறிப்பு . தழுவலால் ஊற்றினிமையைச் சற்று முன்பு அறிந்தானாகலின் . அதைப் பாராட்டினான் , இன்னீரள் என்னும் பாடம் சிறந்ததன்று .