பக்கம் எண் :

பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்.

 

(காதலர் பிரிந்து போனாரல்லர், அவர் உடலால் ஆங்கிருப்பினும் உள்ளத்தால் ஈங்குளர். அவரைக் காணுமளவும் ஆற்றியிரு என்ற தோழிக்குச் சொல்லியது.)

பேணாது பெட்டார் உளர்-(ஆம். நீ சொல்வது உண்மைதான்.) நெஞ்சத்தில் நேயங்கொள்ளாது வாய்ச்சொல்லால் மட்டும் நம்மை விரும்பியவர் இங்கே யுள்ளார் ; மற்று அவர்க்காணாது கண் அமைவு இல-ஆயின் அவ்வுண்மைக்கு மாறாக, என் கண்கள் அவரைக் காணாமையால் அமைதியில்லா திருக்கின்றன.

பிரிவாற்றாமை யறிந்தும் பிரிந்துபோனமையாற் 'பேணாது' என்றும், முன்னர் நலம் பாராட்டிப் "பிரியேன், அஞ்சேல்" என்று வன்புறையுங் கூறினாராகலின் 'பெட்டார்' என்றும் கூறினாள். யான்ஆற்றியிருக்கவும் என் கண்கள் அவரைக் காணும் வேட்கை மிகுதியால் ஆற்றாதிருக்கின்றன என்பதாம். 'மன்' ஓழியிசைக் கண்வந்தது என்றும் 'ஒகாரம்' அசைநிலை யென்றுங் கூறுவர். அவர் உண்மையில் இங்கிருந்தால் என் கண்கள் அவரைக் கண்டு அமைதியுற்றிருக்கும் என்பதை ஒழியிசையாகக் கொள்க. 'மற்று' மாற்றுப் பொருளில் வந்தது. 'கொண்கனை' என்பது காலிங்கர் கொண்ட பாடம்..

"இனிக் கொண்கனை யென்று பாடமாயின், என் கண்கள் தம்மைக் காணா தமைகின்ற கொண்கனைத் தாங்காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாமவரை விழைந்தார் உலகத்துளரோ வென் றுரைக்க,' என்னும் பரிமேலழகருரை கொள்ளத்தக்கதே. இதற்கு 'மன்'அசைநிலை யென்பர் அவர்.