பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 22. ஒப்புரவறிதல்

அஃதாவது இல்லறத்தாருட் பெருஞ் செல்வரானவர் செல்வருள் உயர்ந்தோரான வள்ளல்களைப் பின்பற்றியொழுகுதலின் கண், வளவனாயினும் அளவறிந்தளித்துண். என்ற நெறிமுறைப்படி தத்தம் அளவறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதல், உயர்ந்தோரான வள்ளல்களை யொத்தொழுகுதலும் அவரவர் செல்வத்தின் அளவறிதலும் பற்றி ஒப்புரவறிதல் எனப்பட்டது. இது பெருஞ்செல்வர்க்குரிய உலக நடையாம்.

"இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகன் ஆயலன் பிறருஞ்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப்பட் டன்றவன் கைவண்மையே".

என்று (புறம் 139). உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியிருத்தல் காண்க.

தீவினைக்கு எதிரானதும் அதைப் போக்க வல்லதும் நல்வினையாதலானும், நல்வினையிற் சிறந்தது ஈகையாதலானும், ஈகையிற் சிறந்த வகையான ஒப்புரவறிதல் தீவினையச்சத்தின் பின் வைக்கப்பட்டது. தீவினையாகிய மறத்திற்கு மாறும் மாற்றும் அறம். அறத்தின் சிறந்த வகை ஈகை 'ஈதலறம்' என்றார் ஒளவையாரும்.

 

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.

 

உலகு மாரிமாட்டு என் ஆற்றும் - உலகிலுள்ள உயிர்கள் தம் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரை யுதவுகின்ற முகிலுக்கு என்ன கைம்மாறு செய்கின்றன! ; ஒன்றுமில்லையே !கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆதலால், அம்முகில் போலும் வள்ளல்கள் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு வேண்டுவனவல்ல.

'என்னாற்றும் ' என்ற வினாவிற்குரிய விடை வருவித்துரைக்கப்பட்டது ' கடப்பாடு ' என்னுஞ் சொல் பெருஞ் செல்வர் வறியார்க்குதவக் கடமைப்பட்டவர் என்பதை யுணர்த்தும். கடப்படுவது கடப்பாடு. இனி, வள்ளல்கள் தம் கடமையாகக் கொண்டொழுகுவது கடப்பாடு எனினுமாம்.

"பாரி பாரி யென்றுபல வேத்தி
யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே".

என்னும் கபிலர் பாட்டு (புறம் 107) இங்குக் கவனிக்கத்தக்கது. செய்வாரது வேண்டாமை அவர் செயலின்மேல் ஏற்றப்பட்டது. ' கொல் ' , ' ஓ ' இரண்டும் அசைநிலைகள்.