சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்-சொல்லின் தொகுதியை அறிந்த தூய நடையினர்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக- தாம் ஒன்றை அரசனிடம் சொல்லும்போது, அவனோடிருந்த அவையின் திறத்தை அறிந்து அதற்கேற்ப ஆராய்ந்து சொல்லுக. சொல்லின் தொகை யென்றது அமைச்சர்க்கும் தூதர்க்கும் தெரிந்திருக்கவேண்டிய சொற்றொகுதியை(vocabulary). தூய்மையென்றது, பிறமொழிச் சொல்லும் கொச்சைச் சொல்லும் வழூஉச் சொல்லும் இடக்கர்ச்(vulgar)சொல்லும் அவையல்(unparliamentary) கிளவியும் திசைச்(provincial) சொல்லுங் கலவாது, இயன்றவரை எல்லார்க்கும் விளங்குமாறு பேசும் தூய இலக்கண நடையை. அவையறிந்து சொல்லுதலாவது, அதன் திறத்திற்கேற்ப நடையை உயர்த்தியும் தாழ்த்தியும் இடைநிகர்த்தாகவும் பேசுதல். ஆராய்ந்து சொல்லுதலாவது, இரட்டுறலும் கவர்படலும் இடத்திற்கேற்காச் சொல்லும் குறிப்புச் சொல்லும் நீக்கி, வெளிப்படையாகவும் விளக்கமாகவும் கோவைபடச் சொல்லுதல். ஓரிடத்து நற்சொல் மற்றோரிடத்தில் இடக்கர்ச் சொல்லாக விலக்கப்படுதலால், இடத்திற்கேற்பவும் சொற்களை ஆளவேண்டிய நிலைமையுளதாம். செஞ்சொல் ஆகுபொருட் சொல் (இலக்கணைச் சொல்),குறிப்புச்சொல் என்பன சொல்லின் வகையேயன்றித் தொகையாகா. திருவள்ளுவர் வேத்தியலொடு பொதுவியலையுஞ் சேர்த்தே கூறுவதால், பிற அவைகளிற் சொற்பொழிவாற்றும் அறிஞர்க்கும் இதுவே நெறியாகக் கொள்க.
|