பொருட்பால் உறுப்பியல் அதிகாரம் 95. மருந்து அஃதாவது, அறம்பொரு ளின்பத்திற்குத் தடையாய்ப்பகைபோல் நின்று வருத்தும் பல்வகை நோய்களையுந் தடுப்பனவும் தீர்ப்பனவுமான பல்வேறு நலப்பொருள் தொகுதி. நோய் வரும் வழிகள் அல்லது கரணியங்கள் பழவினை, முன்னோர் தொடர்பு, இயற்கை, ஒட்டுவாரொட்டு, ஊண், உடை, நஞ்சு , உறுப்பறை, வறுமை, பஞ்சம், செய்வினை, அச்சம், போர், இறைவன் முதலியன. தாக்கும் பகுதிபற்றி அகக்கரண நோய், புறக்கரணநோய் என நோய்கள் இருபாற்படும். நோய்நீக்கும் மருத்துவ முறைகள் உட்கொள்வு, முகர்வு, பூச்சு, அணிவு, சுடுகை, ஒத்துகை, வேர்பிடிப்பு, குளிப்பு, அறுப்பு , மந்திரம், மந்திரத்தூக்கம்,(Hypnotism), வழிபாடு,இறும்பூது(miracle). நம்பகம்(Faith) முதலியவனவாகப் பல திறப்படும். பழவினையால் வந்த நோய்க்கு மருந்தில்லையென்பர். இறைவனால் வந்தநோய் இறை வழிபாட்டால் நீங்கும். இவ்விரு வகையுமல்லாத பிறவகை நோய்ப் பண்டுவமே (Treatment) இவ்வதிகாரத்தில் ஆசிரியராற் கூறப்பட்டுள்ளது. மருந்து இயற்கை மருந்து செயற்கை மருந்து என இருவகைப்படும். வேருந் தழையும் போல்வன இயற்கை; மாத்திரையும் பாம்புணிக் கருங்கல்லும் போல்வன செயற்கை; தமிழ மருத்துவத்தில் இயற்கை மருந்துகளே பெரும்பான்மையாம். "வேர்பார், தழைபார்; மெல்ல மெல்லச் செந்தூர நீறு(பற்பம்) பார்."என்பது தமிழ மருத்துவப் பழமொழி. மருத்துவ வேருந்தழையும் அவற்றாற்செய்யப்பட்ட கலவைகளும், பொதுவாகச் சிறப்பான நறுமணமுடைமையால் மருந்து எனப் பெயர் பெற்றன. மரு என்பது நன்மணம். மருக்கொழுந்து என்னும் உலக வழக்கையும் "மருவார் கொன்றை" (தேவா, 530.1) என்னும் செய்யுள் வழக்கையும் நோக்குக; மரு-மருந்து. சிறந்த மருந்துத் தழைகளெல்லாம் மலைகளிலிருப்பதாலும், மலைகளில் வாழும் சித்தரே அவற்றைப் பற்றிய அறிவில் தேர்ச்சி பெற்றிருந்ததினாலும், தமிழக மருத்துவ அகர முதலி மலையகராதியென்றும்; தமிழ மருத்துவம் சித்த மருத்துவம் என்றும். பெயர் பெற்றன. பெரியாரைப் பிழைத்தல், கள்ளுண்டல் என்னும் பகைகள் பெரியாரைப் பிழையாமையென்றும், கள்ளுண்ணாமையென்றும் எதிர்மறைவடிவிற் கூறப்பட்டதுபோன்றே, நோய் என்னும் பகையும் இங்கு மருந்து என்னும் மாற்றுப்பெயராற் கூறப்பட்டதென்க. மற்றப் பகைகளைப் போலாது இஃது அம்மை இம்மை யும்மையென்னும் மும்மையுந் தழுவுவதால், இறுதியில் வைக்கப்பட்டது. |