பக்கம் எண் :

திருக்குறள்69அறம்

35. துறவு
 

341.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

 

ஒருவன்  பல  வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும்,
குறிப்பிட்ட  அந்தப்  பற்று  காரணமாக  வரும்   துன்பம்,     அவனை
அணுகுவதில்லை.
 

342.

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டியற் பால பல.

 

ஒருவனைத்  துன்பம்  துளைத்தெடுக்காமல்  இருக்க எல்லாம் இருக்கும்
போதே  அவற்றைத்   துறந்து  விடுவானே  யானால்,  அவன்   உலகில்
பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
 

343.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

 

ஐம்   புலன்களையும்    அடக்கி    வெல்வதும்,    அப்   புலன்கள்
விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு  இலக்கணமாகும்.
 

344.

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து.

 

ஒரு  பற்றும்   இல்லாதிருத்தலே  துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல்
பற்று   வைப்பினும்,   அது  மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச்
செய்துவிடும்.
 

345.

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க் குடம்பும் மிகை.

 

பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க  முயல்கின்ற   துறவிகளுக்கு
அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும் போது,அதற்கு மேலும்
வேறு தொடர்பு எதற்காக?