மறுமையிலுந் தொடர்தலாலுந் ‘இருமையுஞ் சென்று சுடுதல்' நுவலப்பட்டது. (9) 130. மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே - எனைத்தும் சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு. (பொ-ள்.)மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென்று ஏங்கி - மக்கட்கு நல்வாழ்க்கை அமையும் பொருட்டு மனம் ஏங்கி வாழ்க்கைப்பற்றை இன்னும் விடமாட்டாய்; எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே - நெஞ்சமே, அதற்காக நீ எத்தனை ஊழி வாழவிருக்கின்றனையோ? எனைத்தும் சிறுவரையேயாயினும் செய்தநன்றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு - சிற்றளவாயினும் செய்த அறச் செயலன்றி உயிர்க்கு அடையும் பயன் வேறு சிறிதும் இல்லை. (க-து.)செய்யும் நல்வினைகளே உயிரோடு தொடர்ந்து வரும். (வி-ம்.)"வாழச் செய்த நல்வினை யல்லது, ஆழுங் காலைப்புணைபிறி தில்லை"1என்றார் பிறரும். வாழ்நாள் சிறிதாதலை நினைந்து ‘எனைத்தூழி வாழ்தியோ' எனப்பட்டது. எனைத்தும் இல்லை என்று கூட்டுக : ‘உயிர்க்கு' என்றமையியன் மறுமை பெறப்படும். அறத்துப்பால் முற்றும்
1. புறம். 362.
|