மூவரையும் வாழ்த்தினர் என இயைக்க - தெய்வங்களை வழுத்தினார் என இயைக்க. தானாக முன்வந்து வனம் செல்லும் இளையோனை வழுத்தினர் அல்லது ஏத்தினர் எனல் சிறப்பு. 233 மூவரும் தேர் ஏறிச் சேறல் 1839. | அன்ன தாயர் அரிதின் பிரிந்தபின், முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா, தன்னது ஆர் உயிர்த் தம்பியும், தாமரைப் பொன்னும், தானும், ஓர் தேர்மிசைப் போயினான். |
அன்ன தாயர் - அத்தகைய தாய்மார்கள்; அரிதின் - சிரமப்பட்டு; பிரிந்த பின் - பிரிந்து சென்ற பிறகு; முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா -முன்னே நின்ற வசிட்ட முனிவனைக் கைகூட்பி வணங்கி; தன்னது ஆர் உயிர்த் தம்பியும்- தன்னுடைய அரிய உயிர் போலச் சிறந்த தம்பியாகிய இலக்குவனும்; தாமரைப்பொன்னும் - தாமரையில் வீற்றிருக்கும் திருமகளாய சீதையும்; தானும் - ஓர்தேர்மிசைப் போயினான் - ஒரு தேர்மேல் ஏறிச்சென்றான். தனது - தன்னது விரித்தல் விகாரம் எதுகை நோக்கியது. பொன் - திருமகள், இங்கேசீதை. 234 |