தயரதன் நல்ல நாள் பார்த்தல் 1398. | அரசவை விடுத்தபின், ஆணை மன்னவன், புரை தபு நாளொடு பொழுது நோக்குவான் உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு, ஒரு வரை பொரு மண்டபம் மருங்கு போயினான். |
அரசவை விடுத்த பின் - அரசர் கூட்டத்தை அனுப்பிய பின்பு; ஆணை மன்னவன்- ஆணையைச் செலுத்தும் தயரத மன்னன்; புரைதபு நாளொடு பொழுது - குற்றமற்ற நாளொடு கூடியமுகூர்த்தத்தை; நோக்குவான் - பார்ப்பதற்கு; உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு - சோதிட நூலாராய்ச்சியுடைய சோதிடரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு; வரை பொரு மண்டபம்மருங்கு - மலையை ஒத்த மண்டபத்தில்; போயினான் - போய்ப் புகுந்தான். சோதிடம் பார்க்க அமைதியான சூழல் வேண்டுமாதலின், சோதிடம் வல்லாரோடும் தனியிடம்சென்றான். உரை - ஆகுபெயர்; சோதிட நூலைக் குறித்தது. 85 |