அச்சத்தால் விளையும் செயலைக் கூறிச் சீதை இராமனைத் தழுவும் பாங்கில் அது அடைக்கலம் பூணும் நிலையை உணர்த்தும். மேகம் கடல் நீரைப் பருகிய போது பவளக் கொடியும் சேர்ந்து வந்தது என்பாருமுளர். இது இல்பொருளுவமை அணி. 66 2798. | 'வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும், விளைவன தீமையே ஆம்' என்பதை உணர்ந்து, வீரன், 'உளைவன இயற்றல்; ஒல்லை உன் நிலை உணருமாகில், இளையவன் முனியும்; நங்கை! ஏகுதி விரைவில்' என்றான். |
வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும் - வளைந்த கோரப் பற்களை உடைய இராக்கதருடன் விளையாட்டு நேர்வதானாலும்; தீமையே விளைவன ஆம் என்பதை உணர்ந்து - உண்டாகும் பயன் தீங்கே என அறிந்து; வீரன் - இராமன்; உளைவன இயற்றல் - துன்பம் தரும் செயல்களைச் செய்யாதே; ஒல்லை உன் நிலை உணருமாகில் - விரைவில் உனது நிலையை அறிவானானால்; இளையவன் முனியும் - (என்) தம்பி (இலக்குவன்) கோபிப்பான்; நங்கை விரைவில் ஏகுதி என்றான் - பெண்ணே விரைவாகச் செல்வாய் என்று சொன்னான். அரக்கரோடு விளையாட்டாகச் செயலைச் செய்தாலும் அது தீமையாக முடியும். 'இன்பக் காரணமாம் விளையாட்டினுள் துன்பக் காரணமாய்த் துறப்பித்திடும்' என்ற சிந்தாமணிச் செய்யுளுக்குக் (சிந்தா. 909) 'கடுநட்புப் பகை காட்டும்' என்னும் பழமொழி என நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் இங்கு எண்ணத் தக்கது. முன்னர் மந்தரையின் கூன் முதுகில் விளையாட்டுக்கென உண்டை செலுத்தி அதனால் அரசினை விட்டுக் காடு வந்ததையும் இது நினைப்பிக்கும். 'பண்டை நாள் இராகவன் பாணிவில் உமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உன்னுவாள் (1447) என வருதல் காண்க. 2794 ஆம் பாடல் முதல் 2798 ஆம் பாடல் வரை இராமன் 'வீரன்' எனவே சுட்டப்படுவது எண்ணத்தக்கது. குறிப்பாகப் பிறன் மனை நோக்காத பேராண்மை'யை (குறள். 148) இது குறிக்கிறது எனலாம். இலக்குவன் முனியும் செயல் பின் வருதலை இப்பாடல் முன்னரே அறிவிக்கிறது எனலாம். 67 2799. | பொற்புடை அரக்கி, 'பூவில், புனலினில், பொருப்பில், வாழும் அற்புடை உள்ளத்தாரும், அனங்கனும், அமரர் மற்றும், எற் பெறத் தவம் செய்கின்றார்; என்னை நீ இகழ்வது என்னே, |
|