சென்று அந்த அழகிய சோலையிலுள்ள பன்ன சாலைக்குள் புகுந்தான். கல் நீரிலே கிடப்பினும் அதன் ஈரத்தைப் பெறாதிருக்கும் அது போல் அரக்கரும் இரக்கமற்ற பண்பினராம். 'வைகலும் நீருட்கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாகும் - அஃதே போல வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்குக் கல்லினும் வல்லென்னும் நெஞ்சு' (அறநெறிச் சாரம் 51) என்ற பாடலின் கருத்தை இத்துடன் ஒப்பிடலாம். தொடர்பு இலாதேம் குலம், கல்வி, பிறப்பு, பண்பு முதலிய எவ்வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். கள்ள வாசகங்கள் - வஞ்சகச் சொற்கள். மின்னலும் மேகமும் இணைந்த கருத்தினை ஒட்டி முன்னரே 'பருவக்கால மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி' (2797) என வருதல் காண்க. மிதிலையை மிதி என்ற மன்னன் ஆண்டதால் அந்நகருக்கு இப்பெயர் வந்தது. பொன் - தன்மையாலும் அருமையாலும் சுடச் சுட ஒளிர்வதாலும் சீதைக்கு ஒப்பாயிற்று. பிற மாதரைச் சிந்தையாலும் தீண்டாததால் இராமன் புனிதன் எனப்பட்டான். இதில் உவமை அணி உளது. 69 சூர்ப்பணகை மனம் நைந்து ஏகுதல் | 2801. | புக்க பின், போனது என்னும் உணர்வினள்; பொறையுள் நீங்கி உக்கது ஆம் உயிரள்; ஒன்றும் உயிர்த்திலள்; ஒடுங்கி நின்றாள்; தக்கிலன்; மனத்துள் யாதும் தழுவிலன்; சலமும் கொண்டான்; மைக்கருங் குழலினாள்மாட்டு அன்பினில் வலியன்' என்பாள். |
புக்கபின் - (இராமனும் சீதையும் பன்னசாலையுள்) சென்ற பின்னர்; போனது என்னும் உணர்வினள் - போயிற்று என்று கூறுதற்குரிய அறிவு நீங்கியவளாய்; பொறையுள் நீங்கி உக்கது ஆம் உயிரள் - உடம்பிலிருந்து நீங்கி உதிர்த்து விட்டதான உயிர் உடையவளாய்; ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் - சிறிதும் மூச்சு விடவும் மாட்டாமல் ஒடுங்கி நின்று; தக்கிலன் மனத்துள் யாதும் தழுவிலன் - மனத்தில் தகுதிக் குணமில்லாதவனும் (காமுற்ற என்னிடம்) யாதொரு உதவி செய்யாதவனுமாகி; சலமும் கொண்டான் - தணியாச் சினம் கொண்டுள்ளான்; மைக்கருங் குழலினாள் மாட்டு அன்பினில் வலியன் என்பாள் - மை போன்ற கரிய கூந்தலுடையவளிடத்து (இவன்) அன்பு காட்டுவதில் உறுதியுள்ளவன் என்று எண்ணியவளாய். பொறை - சுமை போலுள்ள உடல், உயிரைப் பொறுத்துக் கொண்டுள்ள உடல் எனலும் ஆம். தக்கிலன் - தகவிலன் (திருக்கோவையார் 376 கொளு). சலம் - தணியாச் சினம். அன்பினில் வலியன் - தளராத அன்புடையவன் எனலுமாம். இராமன் பன்ன சாலைக்குள் சென்றவுடன் அறிவு ஒழிய, உயிர்ப்பு ஒடுங்க, செயல், அடங்க, உயி்ர் நீங்கினாற் போன்று மூர்ச்சித்துப் பின் தெளிந்து பலவாறு எண்ணினாள். இது சூர்ப்பணகையின் |