| தெரிந்த மூக்கினள், வாயினள், செக்கர் மேல் விரிந்த மேகம் என விழுந்தாள் அரோ. |
சொரிந்த சோரியள் - பெருகுகின்ற இரத்தத்தையுடையவளும்; கூந்தலள் - (விரிந்த) தலைமயிரையுடையவளும்; தூம்பு எனத் தெரிந்த மூக்கினள் - மதகு போலத் துவாரங் கொண்ட மூக்கையுடையவளும்; வாயினள் - (அகன்ற) வாயையுடையவளுமாகிய சூர்ப்பணகை; மேல் செக்கர் விரிந்த மேகம் என - மேலே செவ்வானம் படர்ந்துள்ள மேகம் போல; இருந்த மாக்கரன் - (அவையில்) இருந்த பெருமை மிக்க கரனுடைய; தாள் இணையின் மிசை - இரண்டு கால்களின் மேலும்; வீழுந்தாள் - வீழ்ந்தாள். 'உங்களுக்குக் கூற்றுவனான கரனை இப்போதே கொண்டு வருகின்றேன்' என்று மூண்ட வயிரத்தோடு சென்ற சூர்ப்பணகை அறுபட்ட தன் உறுப்புக்களிலிருந்து இரத்தம் பெருக, விரித்த கூந்தலோடும் பெரிய வாயினாற் கதறிக் கொண்டு சபையில் வீற்றிருந்த கரனுடைய அடிகளில் வீழ்ந்தாள் என்பது. அவளது உடம்பில் பெருகும் இரத்தப் பெருக்கிற்கும், செம்பட்டை மயிர்க்கும் செவ்வானமும், கரிய உடம்புக்கு மேகமும் உவமைகளாயின. அரோ : ஈற்றசை; உவமையணி. 1 2876. | 'அழுங்கு நாள் இது' என்று, அந்தகன் ஆணையால் தழங்கு பேரி எனத் தனித்து ஏங்குவாள்; முழங்கு மேகம் இடித்த வெந் தீயினால் புழுங்கு நாகம் எனப் புரண்டாள் அரோ. |
அழுங்கு நாள் - (அந்த அரக்கர்கள்) அழியக் கூடிய நாள்; இது என்று - இதுவே என்று; அந்தகன் ஆணையால் - யமனுடைய கட்டளையால்; தழங்கு பேரி என - (அடிக்கப்பட்டு) ஒலிக்கின்ற பெரிய முரசு போல; தனித்து ஏங்குவாள் - தனியே (பேராரவாரம் உண்டாகுமாறு) கதறியழுபவளான சூர்ப்பணகை; முழங்கு மேகம் இடித்த - ஆரவாரிக்கின்ற மேகம் கக்கும்; வெந் தீயினால் - கொடிய நெருப்பாகிய இடியினால்; புழுங்கு நாகம் என - வெந்து துடிக்கின்ற பாம்பு போல; புரண்டாள் - (நிலத்திலே) புரண்டாள். சூர்ப்பணகை கதறியழுத குரலோசை அங்குள்ள கரன் முதலான அரக்கரை இராமனோடு உடனே போர் செய்ய எழுமாறு தூண்டி |