'தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை' என்பர் நம்மாழ்வார். (திருவாய்மொழி 8-8-4). யாவையும் எவருமாய் விளங்கும் இறைவன் இயல்பை ''அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ'' எனப் பரிபாடலும் (3-68) 'உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துள்ளான் (திருவாய்மொழி 1-1-7) என நம்மாழ்வார் கூறுவதும் ஒப்பு நோக்கத்தக்கன. 'முப்பரம் பொருளுக்கு முதல்வன்' (314) என்றும், 'மூவருந்திருந்திடத் திருத்தும் அத்திறலோன்' (1349) என்றும் இராமனைப் போற்றும் கம்பர். இராமனே மும்மூர்த்தியும் ஒன்றாய் அமைந்த பரம்பொருள் என்றும் உணர்த்துவார். 'சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை, ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்'' (5884) என்பது அனுமன் கூற்றாகும். இறைவன் தன்னை உணரவல்ல அடியார்க்கு உணரப்படும் பொருளாதலை ''என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற'' (திருவாய்மொழி- 8.8.4) என்பதாலும் அறியலாம். ''சித்து என அருமறைச் சிரத்தின் தேறிய, தத்துவம் அவன், அது தம்மைத் தாம் உணர்வித்தகர் அறிகுவர்'' (6249) என்னும் பிரகலாதன் கூற்று காண்க. திரிமூர்த்திகள் பரம்பொருளின் அம்சம் என்பதும், தத்துவங்களும், உலகங்களும், உயிர்களும் பரம்பொருளின் உண்மையைத் தெரிவிப்பனவே என்பதும் பாடற்பொருளாகும். 'உரு' என்னும் சொல் பாடலில் பல இடங்களில் வருவதால் சொற்பின் வருநிலை அணியாகும். 1. பம்பை வாவிப்படலம். இராமபிரானும் இலக்குவனும் பம்பை என்னும் பொய்கையை அடைந்து, அங்குள்ள காட்சிகளைக்காணும் செய்திகளைக் கூறுவதால் இப்படலம் 'பம்பை வாவிப்படலம்' எனப்பட்டது. பம்பை என்பது மானிடர் ஆக்காத ஒரு பெரிய பொய்கை. அது கிட்கிந்தை நகரத்திற்கு அருகில் இரலை என்னும் குன்றின்கீழ் அமைந்துள்ளது. இனிய நீர்நிலையாய்ப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாய்ப் பம்பை விளங்கிற்று. அங்குள்ள மலர்கள், பறவைகள், மீன்கள், களிறுகள் முதலிய இயற்கைக் காட்சிகளைக் கண்ட இராமபிரான் சீதையின் நினைவால் வருந்தினான். பின்னர் இலக்குவன் வேண்டுகோளுக்கு இணங்கிப் பம்பையில் நீராடி மாலை வழிபாடுகளைச் செய்தான். அன்றிரவு இருவரும் அங்கே தங்கி, அடுத்த நாள் காலை சீதையைத் தேடிச் சென்றனர். பம்பைப் பொய்கையின் தோற்றம் கலிவிருத்தம் | 3709. | தேன் படி மலரது;செங் கண், வெங்கைம்மா - தான் படிகின்றது; தெளிவு சான்றது; |
|