புக்கவழி - புகுந்த மரபு (தசரதன் மரபு) போந்த வழி -பிறந்த மரபு (சனகன் மரபு) சிக்க - உறுதியாக. அரக்கர் இயல்பு தெழித்துப் பேசுதல் போலும். நாவரசர், இராவணனை திண்ணமாத் தெழித்து நோக்கி உணரா ஆண்மையான், என்று இராவணப் பதிகத்தில் பேசுவார் (தேவாரம் 34). (156) 5225. | கொல்வான் உற்றோர் பெற்றியும், - யாதும் குறையாதாள்- ‘வெல்வான், நம்கோன்; தின்னுமின்; வம்!’என்பவர் மெய்யும், வல் வாய்வெய்யோன் ஏவலும், எல்லாம் மனம் வைத்தாள், நல்லாள்; நல்லகண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள். |
யாதும்குறையாதாள் - எத்துன்பத்தாலும் மனம்குறையப் பெறாத; நல்லாள் - பிராட்டி; கொல்வான் - கொல்லும் பொருட்டு; உற்றோர் பெற்றியும் - அணுகிய சில அரக்கிகளின் தன்மையையும்; நம்கோன் - நம் தலைவனான இராவணன்; வெல்வான் - வெற்றியடைவான் (ஆகையால்); தின்னுமின் - இவளைத் தின்னுங்கள்; வம் - வாருங்கள்; என்பவர் மெய்யும்- என்று கூறிய சில அரக்கியர்களின் உடற்பருமனையும்; வல்வாய் - கொடியமொழிபேசும்; வெய்யோன் - கொடிய இராவணனின்; ஏவலும் - கட்டளையையும்; எல்லாம் - யாவற்றையும்; மனம் வைத்தாள் - மனத்திலே எண்ணிப் பார்த்து; நல்ல கண்கள் கலுழ்ந்து - நல்ல கண்களில் கண்ணீர் ததும்பி; நகுகின்றாள் - சிரிப்பவளானாள். பெற்றியும்,மெய்யும், ஏவலும் எல்லாம் மனம் வைத்தாள் கலுழ்ந்து நகுகின்றாள். வல்வாய் வெய்யோன் - எமன். ஏவலில் - அவன் தூதரைப் போல் என்பது பழையவுரை (அடை - பதி). நகுதல் - துயரம் மிகுதியால் வந்தது. கலுழ்தல் - கலங்குதல் - அழுதல். கண்தாம் கலுழ்வது எவன்கொல் என்பது வள்ளுவர் தந்த தொடர். (157) திரிசடைசொல்லால் சீதை தேறுதல் 5226. | இன்னோரன்ன எய்திய காலத்து, இடை நின்றாள், ‘முன்னேசொன்னேன் கண்ட கனாவின் முடிவு, அம்மா ! |
|