| 4817. | துண்டப் பிறைத்துணை எனச்சுடர் எயிற்றாள் கண்டத்திடைக்கறை யுடைக்கடவுள் கைம்மா முண்டத்து உரித்தஉரியால் முளரிவந்தான் அண்டத்தினுக்குஉறை அமைத்தனைய வாயாள். |
பிறைத் துண்டத்துணை என - பிறைத் துண்டத்தின்இரட்டை என்றுசொல்லும்படி; சுடர் எயிற்றாள் - விளங்குகின்ற கோரைப் பற்களை உடையவள்; கண்டத் திடைக் கறையுடைக் கடவுள் - கழுத்தி்ன்கண் விடத்தால் உண்டாகிய நீலநிறம் பொருந்திய சிவபிரான்; கைம்மா - யானையினது; முண்டத்து உரித்த உரியால் - உடம்பிலிருந்து உரித்த தோலாலே; முளரி வந்தான் அண்டத்தினுக்கு - பிரமதேவனால் ஆகிய அண்டத்துக்கு; உறை அமைத்து அனைய - உறை தைத்துப் போட்டால் எவ்வளவு பெரிதாக இருக்குமோ அத்தகைய; வாயாள் - வாயினை உடையவள். தலையற்ற உடலைமுண்டம் என்றும், உடலற்ற தலையைக் குண்டம் என்றும் கூறும் வழக்குண்டு. முனிவர்கள் ஏவிய யானையைச் சிவபிரான் உரித்துப் போர்த்துக் கொண்ட செய்தி புராணங்களில் காண்க. இது கஜ சம்ஹாரமூர்த்தம் - கோயில்களில் காணலாம். (77) | 4818. | நின்றாள்நிமிர்ந்து அலைநெடுங் கடலின் நீர்தன் வன்தான் அலம்பமுடிவான் முகடு வௌவ அன்றுஆய்திறத்தவன், அறத்தை அருளோடும் தின்றாள்ஒருத்திஇவள் என்பது தெரிந்தான். |
நிமிர்ந்துஅலைநெடுங் கடலின் நீர் - பெருகி அலையுடன் கூடிய கடலின் தண்ணீரானது; தன்வன்தாள் - தன்னுடைய வலிமையான பாதத்தை; அலம்ப - கழுவ; வான் முகடு முடி வௌவ - ஆகாயத்தின் உச்சியை தலை அளாவ; நின்றாள் - (அனுமனுக்கு எதிரே) நின்றாள்; ஆய் திறத்தவன்- ஆராயும் வலிமைபெற்ற அனுமன்; இவள் - இந்த அரக்கி; அறத்தை -தருமத்தை; அருளோடும் தின்றாய் ஒருத்தி - கருணையுடன் சேர்த்துஉண்டாளாகிய ஒருத்தி; என்பது - என்னும் உண்மையை; அன்று தெரிந்தான்- அப்போது தெரிந்து கொண்டான்; அரக்கியானவள்பேருருக்கொண்டு நின்றாள். அனுமன் இவள் அறத்தையும் அருளையும் தின்ற ஒருபெண் என்பதை அறிந்தான். |