பக்கம் எண் :

பக்கம் : 1146
 

      “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
      செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள் - 110)

     என்பவாகலின், தனக்கு நன்மையே செய்த நல்வினையைப் புறக்கணித்துத் தீவினையே
கன்றித்திரிதரும் வேந்தர் அண்ணாத்தல் செய்யா அளறு புகுவர் என்பான், “நரகங்கட்கு
அரசராவார்” என்றான். அரசராதல் அந்நரகத் துன்பம் முழுதும் உரிமையுடன் நுகர்தல
என்க.

(714)

 
நிலையாமை நினைதல்
1845. சென்றநாள் பெயரு மேனுஞ்
     செல்வமுஞ் செருக்கு மாக்கி
நின்றநா ணிலவு மேனு
     நெறிநின்று வருந்த வேண்டா
இன்றுபோல் வாழ்து மன்றே
     யிப்படித் தன்றி யாங்கள்
1பொன்றுநாள் வருவ தாயின்
     வாழ்க்கையோர் 2பொருள தன்றே.
 
     (இ - ள்.) சென்ற நாள் பெயரும் ஏனும் - கழிந்த நம் வாழ்நாட்கள் மீண்டும் வந்து
நம்முடன் புணவர்வனவாயினும், செல்வமும் செருக்கும் ஆக்கி நின்ற நாள் -
செல்வப்பேற்றையும் அதனாலாய செருக்குடை மையையும் ஒருங்கே அளித்து எஞ்சிநின்ற
நம் வாழ்நாள்கள், நிலவுமேனும் - கழியாதே நிலைத்திருப்பன ஆயினும், நெறிநின்று வருந்த
வேண்டா - யாம் தவநெறியிலே நின்று பொறியடக்குதல் முதலியவற்றால் வருந்தாமலே,
இன்றுபோல் வாழ்தும் - இற்றைக்கு இன்ப நுகர்ந்து வாழுமாறு போலவே எப்பொழுதும்
வாழ்ந்திருக்கக் கடவேம், இப்படித்தன்றி - இவ்வாறே நிலைத்தலின்றி யாங்கள் - யாம்,
பொன்றும் நாள் வருவதாயின் - இறந்தொழியும் நாள் ஒன்று வந்தெய்துதல் ஒருதலை
ஆனால், வாழ்க்கை - இப்போது எய்தியுள்ள இந்நிலையுதலில்லாத வாழ்க்கையும், ஓர்
பொருளது அன்றே - ஒரு சிறந்த பொருளாகப் போற்றற்பாலதன்றாம், எ - று.)

     இது யாக்கை நிலையாமை கூறிற்று.

      இறப்பின்றி வாழ்வோம் என்பது திண்ணமாக யாம் அறிவேமெனில், தவமாற்றி
வருந்த வேண்டாம். “குடம்பை தனித் தொழியப் புட்பறக்குமாப் போலே” கணத்திடை
உயிர்கழிவது கண்டும், இவ் வாழ்க்கையைப் பொருளாக மதித்துத் தவநெறிச் செல்லாமை
மடமை என்றிரங்கியவாறு.

(715)

     (பாடம்) 1 பொன்றி. 2 பொருளன் றென்றான்.