பக்கம் எண் :

பக்கம் : 1153
 
lகூற்றத்தாற் செல்வத்திற்கூனம் எவ்வாறு நிகழும்
எனலும் விடையும
1855. கோள்வினை பயின்ற கூற்ற
     வரசனாற் கொள்ளற் பால
கேள்வினை பயின்ற நூலிற்
     கிளந்துநீ ருரைமி னென்ன
1வாள்வினை 2புரந்த தோளான்
     மனத்ததை யுணர்ந்து மாதோ
நாள்வினை புரிந்து நங்க
     ளுயிர்நிறை கொள்ளு மென்றார்.
 
     (இ - ள்.) கோள்வினை பயின்ற கூற்ற அரசனால் - கொலைத் தொழில் நன்கு
பயின்றுள்ள அம்மறலி என்னும் அரசனாலே, கொள்ளற்பால - கவர்ந்துகொள்ள
உரியனயாவை, கேள்வினை பயின்ற நூலில் கிளந்து நீர் உரைமின் என்ன -
கேட்டற்றொழிலோடு பயிலப்பட்ட மெய்ந்நூல்களினின்றும் எடுத்துக் கூறுங்கோள் என்று
வினவ, வாள்வினை புரந்த தோளான் - வாளின் தொழில் வன்மையாலே உலகத்தை
ஓம்பிய தோள்களை உடைய பயாபதி மன்னனின், மனத்ததை - அகத்திலுள்ள கருத்தினை,
உணர்ந்துமாதோ - குறிப்பாணுணர்ந்து, நாள் வினை புரிந்து நங்கள் உயிர்நிறை கொள்ளும்
என்றார் - நம் ஆயுள் முடிவுறும் நாளையும் நம் ஊழின் தன்மையையும் ஆராய்ந்து,
நிற்றலையுடைய நம் உயிரை அது கவர்ந்து கொள்ளும் என்று கூறினர், (எ - று.)

     நாள்வினை புரிந்து - நாளையும் வினையையும் ஆராய்ந்து என்க. கூற்றம் குறுகுதல்
செல்வத்திற்கு ஊனம் என்றீர். அக் கூற்றம் செல்வத்தை எவ்வாறு கவரும் எனப் பயாபதி
வினவ, அச்செல்வத்தை நுகர்தற்குரிய உயிரை அக் கூற்றம் கவரும் என்று அமைச்சர்
கூறினர் என்க.

(725)

 
1856. அக் கூற்றத்தை வெல்ல
     உபாயங் கூறுக என்னல்
சந்தினாற் றவிர்க்க லாமோ
     சார்பினா லொழிக்க லாமோ
பந்தியா முன்னந் தாமே
     பகைத்திருந் துய்ய லாமோ
வெந்திறற் காலன் றன்னை
     மேற்சென்று வெல்ல லாமோ
உய்ந்துயிர் யாங்கள் வாழு
     முபாயநீ ருரைமி னென்றான்.
 
 

    ்(பாடம்) 1 வாள்வலி. 2 புரிந்த.