பக்கம் எண் :

பக்கம் : 13
 

அந்நாட்டகத்தின் பல விடங்களினும் உள்ள நீர் நிலைகளில். தாமரை மலர்கள் மிகுதியாக
மலர்ந்து விளங்குகின்றன. அந்நீர் நிலைகளில் உள்ள மீன்கள் தாமரை மலர்களின்மீது
துள்ளிக்குதித்து விளையாடல் புரிந்து களிக்கின்றன. வீட்டகத்திலோ அழகிய மாதர்கள்
பலர் நிறைந்துள்ளனர். அவர்களுடைய முகங்களோ செந்தாமரை மலரைப்போன்று
திகழ்கின்றன. அவர்களுடைய கண்கள் அடிக்கடி மருண்டு பார்க்கும்
பான்மையுடையவையாகளாக மிளிர்கின்றன. தாமரை மலரில் மீன்கள் துள்ளிக்குதிக்குந்
தோற்றமும், மாதர்முகத்துக் கண்களின் பிறழ்ச்சியும் காண்போர்க்கு ஒரே
தன்மையுடையனவாகக் காணப்பெறுகின்றன. இதனால் அந்நாட்டின் நீர்வளமும் மாதர்களின்
அழகுவளமும் இனிது புலனாகின்றன. மாதர்களின் முகங்கட்குத் தாமரைமலர் உவமை;
அவர்களுடைய கண்களுக்குக் கயல்மீன்கள் உவமை.

( 2 )

வயல்களும் ஊர்களும்
9. ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன
தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை
வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி
ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.
     (இ - ள்.) ஆங்கு - அந்நாட்டின்கண்ணுள்ள; தண்பணை - குளிர்ந்த மருதநிலங்கள்;
அவர் - அந்த மங்கையரின்; அணிநடை - அழகிய நடையினையுடைய; அன்னத்தோட்டன
- அன்னப் பறவைகளின் தொகுதி யினுடைய; தீங்குரல் மழலையால் சிலம்பும் - இனிய
குரலான நிரம்பா ஒலியால் ஆரவார முடையனவாயிருக்கும்; ஊர்கள் - அந்நாட்டிலுள்ள
ஊர்கள், வீங்கு - பருத்த; இளமுலை அவர் - முற்றாக்கொங்கைகளையுடைய மங்கையரின்;
மெல் என் சீறடி - மெல்லிய சிறிய அடிகளில் அணியப்பட்ட; ஓங்கு - உயர்ந்த; இரும்
சிலம்பினால் - பெரிய சிலம்புகளினால்; சிலம்பும் - ஆரவாரமுடையனவாயிருக்கும், (எ - று.)

     ஆங்கு : அசைநிலை. அவர் என்னுஞ்சுட்டை முற்பாட்டிலுள்ள மங்கையருக்காக்குக.

     அந்நாட்டின் வயலிடங்களெல்லாம் அன்னப்பறவைகளின் இன்னொலி
யால் சிறந்திருக்கும். ஊரிடங்களோ மங்கையர்கள் காலில் அணிந்துள்ள