பக்கம் எண் :

பக்கம் : 188
 
அரசன் பேசத்தொடங்குதல்
241. ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன்
பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின்
1வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட
வீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே.
 

     (இ - ள்.) இறைவன் அரசர் கோமகன் - அந்நாட்டு மக்களுக்குத் தலைவனாக
விளங்கும் அரசர்பெருமான், அமைச்சரோடு - அமைச்சர் களுடன்; பூங்கமழ் மண்டபம்
பொலியப் புக்கபின் - அழகுவிளங்குகின்ற மந்திரசாலையானது விளக்கத்தையடையுமாறு
உள்ளே நுழைந்தபிறகு, வீங்கு ஒளி மணிக்குழை மிளிர்ந்து வில் இட - மிகுந்த
ஒளியையுடைய அழகிய குண்டலங்கள் விளங்கிச் சுடரைவீச; ஈங்கு இவை மொழிந்தனன்
என்ப - இப்பொழுது மேலே கூறப்போகுஞ் செய்திகளைக் கூறினான் என்று சொல்வார்கள். ( எ - று.)
என்ப என்பதை அசை நிலையாகக் கொள்ளினும் அமையும். அரைசர்; போலி. மண்டபம்
இயற்கையில் அழகுடன் மிளிர்ந்ததாயினும், அரசன் சென்றவுடன் மேலும் அழகைப்பெற்றுத்
திகழ்ந்ததென்று உணர்த்தற் பொருட்டுப், ‘பூங்கமழ் மண்டபம் பொலிய‘ என்றார்.
உரையாடும்போது தலையசைத்து, காதில் உள்ள குண்டலங்களும் ஆடி ஒளியை
வெளிப்படுத்திற்றென்பர். ‘மணிக்குழைமிளிர்ந்து வில்லிட‘ என்றார்.

( 3 )

வேறு
மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்
242. 2மண்ணியல் வளாகங் காக்கு 3மன்னவர் வணக்க லாகாப்
புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட
நுண்ணிய நூலி னன்றி நுழை 4பொரு ளுணர்த றேற்றா
ரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே.
 

     (இ - ள்.) மண்ணியல் வளாகம் காக்கும் மன்னவர் - மண்திணிந்த இந்
நிலவுலகத்தைப் புரக்கும் அரசரானவர்கள். வணக்கலாகாப் புண்ணியநீர ரேனும் -
எவராலும் வளையச் செய்தற்கு அரிய நல்வினையை உடையவர்களாயினும், புலவராற்
புகலப்பட்ட - நுண்மாண் நுழைபுல மிக்க


 (பாடம்) 1. வீங்கவை. 2. மண்ணியல். 3. மன்னரால். 4. பொருளுணர்தல் செல்லார்.