பக்கம் எண் :

பக்கம் : 27
 
  உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால்
புள்ள லைத்த புனலபு லங்களே.
 
     (இ - ள்.) அள்இலைக் குவளைத்தடம் மேய்ந்து-செறிந்த இலைகளை யுடைய
நீலமலர்களையுடைய நீர்நிலையில் அவற்றை மேய்ந்து; அசைஇ-அசையிடுதலால்;
கள்அலைத்த கவுள் கருமேதி-குவளைப்பூவின் தேன்வழியா நின்ற கடைவாயையுடைய கரிய
எருமையின்; உள் அலைத்து-உள்ளத்தே அதன் கன்றின் நினைவு தோன்றி அலைத்தலால்;
பால்ஒழுக-அதன் பாலானது நீரிலே ஒழுகவே; புள்-அன்னப்பறவைகள்; குடைந்து
உண்டலால்-நீரில் முழுகி அப்பாலைத் தேர்ந்து உண்பதனால்; புலங்கள்-நீர் நிரம்பிய
வயல்கள்; அலைத்த புனல்-அவ்வன்னங்களால் உழக்கப்பட்ட நீரையுடையவாயின. (எ - று.)

     இது மருதநிலத்தன்மை. எருமை மருதநிலத்து விலங்கு. எருமைகள் குவளையை
மேய்ந்து அசையிடும்போது அக்குவளையிலுள்ள தேன் அவ்வெருமைகளின் வாயின்
இருபுறத்தும் ஒழுகினவென்பார், ‘குவளை மேய்ந்து அசைஇக் கள்ளலைத்த கவுட்கருமேதி‘
என்றார். அசைஇ, சொல்லிசை யளபெடை. எருமைகள் தாமாகவே பால்சுரக்குமோ எனின்
செழிப்பு மிகுதியால் சுரக்கும் என்க. இனி எருமைகள் கலக்கி நீர் விளையாடுகின்ற
அதிர்ச்சியால் நீர்ப்பறவைகள் அஞ்சியெழுந்து நீரை யலைத்தன எனினுமாம். இதற்கு
உண்டற்றொழிலை எருமைக்கேற்றுக.

( 21 )

நெய்தல்
28. கெண்டை யஞ்சினை மேய்ந்து கிளர்ந்துபோய்
முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்
கண்டு நின்று கனலுங் கழியெலாம்.

 

     (இ - ள்.) கழிஎலாம்-நீர்க்கழிகளில் எல்லாம்; கெண்டை அம்சினை
மேய்ந்து-கெண்டைமீன்களையும் அவற்றின் அழகிய முட்டைகளையுந் தின்று;
கிளர்ந்துபோய்-செருக்கிச் சென்று; முண்டகம் துறை சேர்ந்த முதலைமா-நீர்முள்ளி நிறைந்த
நீர்த்துறையை அடைந்த முதலைகள்; வண்டல் வார்கரை-வண்டலையுடைய நீண்ட
கடற்கரையோரங்களிலுள்ள; மாமகரம் குழாம் கண்டு-பெரிய சுறாமீன்களின்
கூட்டத்தைப்பார்த்து; நின்று கனலும்-அஞ்சாது எதிர்த்து நின்று சினக்கும். (எ - று.)