பக்கம் எண் :

பக்கம் : 452
 

     திருவிழாவையுடைய, தெருதுற்றபின் - அந்நகரத்துத் தெருவை அத்தூதர்கள்
எய்தினபின்னர் ஆண்டெழும், சீர் இமிழால் - சிறந்த இசைப்பாடலைக் கேட்டலாலே,
சென்று பொலிவு எய்தினர் - அத்தெருவினூடே சென்று மகிழ்ச்சியால் விளங்கினர்,
(எ - று.)
     விம்மி - விம்ம. முழவு விம்ம முகில் முரன்று எழும் என்க. சீர் இமிழ் - சீரமைந்த
இசைப்பாடல்.

     மயில் ஆலுவனவாகிய தெரு. விழவினையுடைய தெரு என்று தனித்தனி கூட்டுக.
 

( 81 )

இதுவுமது
654. சூளிகை சூடிய சூல விலைத்தலை
மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின்
னீளிய நீரரு வித்திரள் வீழ்வன
காளைக டாதைந கர்ப்பல கண்டார்.
 

     (இ - ள்.) சூளிகை சூடிய சூலம் இலைத்தலை - அரமியங்களின் உச்சியில் சூட்டிய
சூலங்களின் கூர்மையுள்ள இலை நுனிகள், மாளிகைமேன் மழைமாமுகில் போழ்தலின் -
மாளிகைகளின்மேற்றவழும் மழைபெய்தற்குக் காரணமான பெரிய மேகங்களைப்
பிளத்தலாலே, நீளிய நீர் அருவித்திரள் வீழ்வன - நீண்ட நீராலாய அருவிகள்
வீழ்வனவற்றை, காளைகள் தாதை நகர்ப்பல கண்டார் - காளைபோன்ற
விசயதிவிட்டர்களின் தந்தையாகிய பயாபதி அரசனுடைய போதனமா நகரத்தே பற்பல
விடங்களில் அத்தூதுவர் கண்டு சென்றனர், (எ - று.)

     விசும்பிலியங்கும் முகில்களைப் போதன நகரத்துள்ள மாளிகையின் சிகரங்கள்
கிழித்தலாலே அம்முகில்கள் பற்பல இடங்களில் நீரை அருவியாகப் பொழிந்தன என்க.
 

( 82 )

இதுவுமது
655. கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவு
மூடினர் சிந்திய வொண்சுடர் மாலையு
மூடிய மூரி நெடுந்தெரு வொப்பவு
மூடு செலற்கரி தாயிட ருற்றார்.
 

      (இ - ள்.) கூடுநர் கோவை மணிக்கலை உக்கவும் - தம்முட் கூடிய காதலர்கள்
ஆற்றிய கலவிப்போரின்கண் அற்றுதிர்ந்த மணிமேகலை முதலியவும், ஊடினர் சிந்திய
ஒண்சுடர் மாலையும் - கணவரோடு ஊடிக்கொண்ட மகளிர்கள் சினத்தால் அறுத்து வீசிய
ஒளிகாலும் மணிக்கலன் களும், மூரி நெடுந்தெரு மூடிய ஒப்பவும் - பெரிய நீண்ட
தெருக்கள் மூடப்பட்டனவாய்த் தம்முள் ஒன்றை ஒன்று ஒத்துக்கிடத்தலால், ஊடு
செலற்கரிதாய் இடருற்றார் - அத்தெருக்களினூடே வழிபெற்றுச் செல்லமாட்டாது
அத்தூதர்கள் வருந்துவாராயினர், (எ - று.)