குலத்தாராகிய மகளிர்களும் ஏத்துதற்குரிய பூங்கொம்பை ஒத்த அச்சுயம்பிரபை நல்லாளும், முல்லைக்கொடி ஒத்தாள் - அம்முகிலால் போற்றப்பட்ட முல்லைக்கொடியைப் போன்று, திருவாய் மலர்ந்தாள், (எ - று.) நகுவிக்கும் மாரி வந்ததோர் மாரி எனத் தனித்தனி கூட்டுக. முகில் தனது குளிர்ந்த மழைத்துளியை உதிர்த்து, முல்லையைத் தழைத்து மலரச்செய்தல் போன்று, தனது குளிர்ந்த நலம்பாராட்டுரையாகிய மொழியாலே, நங்கை முறுவல்பூப்பச் செய்தனன் என்பது கருத்து. குலம் பாராட்டுதலாவது : “போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்” கண்ணகியாரை மாதரார் தொழுதேத்தினாற்போன்று தன் குலத்து மாதரார் தொழுதேத்தல். |
(இ - ள்.) கமழ்தாரான் - நறுமணங்கமழும் மலர்மாலையணிந்த திவிட்டநம்பி, தேன் ஆர் கோதை செங்கயல் வாட்கண் சிறைகொள்ள - தேன்பொருந்திய மலர்மாலையையுடைய சுயம்பிரபையினுடைய சிவந்த கயலையும் வாளையும் நிகர்த்த கண்கள் தன் நெஞ்சைப் பிணித்துக் கொள்ளுதலாலே, ஊன் ஆர் வேலான் - ஊன் பொருந்திய வேற்படையுடையவன்; உள்ளம் இழந்தான் - தன் நெஞ்சம் இழக்கப் பெற்றவனாய், மேல்நாள்போல - மணம்புணர்தற்கு முன்னர் நிகழ்ந்த நாட்களிற் போல, உழையாரை மெய்ப்பட மாட்டான் - தன் தோழர்களுடனே தலைப்பட்டு அளவளாவுதல் ஒழிந்தவனாய், விளையாடும் கான் ஆர் சோலைக் காவகம் புக்கான் - விளையாடுதற்குரிய மணமிக்க பூஞ்சோலையாகிய பொழிலின்கண்ணே சுயம்பிரபையோடே புகுந்தான், (எ - று.) வேலான், கோதையின்கண் சிறை கொள்ளுதலாலே, உள்ளம் இழந்தவனாய்த் தன் உழையாரைப் பண்டுபோலத் தலைப்பட்டுப் பயிலாது, நங்கையோடே பூம்பொழிலகத்தே புக்கான், என்க. |