(இ-ள்.) மங்கையரே - ஸ்திரீமார்களே, மணவாளராகுவர் -
புருஷர்களாகவும் பிறப்பார்கள், தங்கையரே - தங்கையானவர்களே,
மறுத்து - மீண்டு, ஆயுமாகுவர் - மாதாவாகவுமாவார்கள், அங்கவரே
- அங்கு அப்படிப்பட்டவரே, அடியாருமாகுவர் - (மறு சன்மத்தில்)
அடியார்களாகவுமாவார்கள், பிறவியது - ஸம்ஸாரத்தினது, இயல்பின் -
ஸ்வபாவமாகியதின், வண்ணம் - விதாயமானது, இங்கிது - இங்கே
இத்தன்மையா யிராநின்றது, எ-று. (72)
213. சுற்றமும் பகையுமென் றிரண்டு மில்லையா
மற்றிந்த வழக்கினான் மதியின் மாந்தர்கள்
பெற்றியைப் பார்கொடா பெற்ற தொன்றிலே
செற்றமு மார்வமுஞ் சென்று நிற்பரே.
(இ-ள்.) சுற்றமும் - உறவினரும், பகையுமென்று -
சத்துருக்களுமென்று, இரண்டு - இவ்விரண்டு தன்மையும், இல்லையாம்
- நிலையாக ஆகப்பட்டவை இல்லையாகும், மற்று - பின்னர், இந்த
வழக்கினால் - இந்த நிலையில்லாத வழக்கத்தினாலே, மதியின் -
புத்தியையுடைய, மாந்தர்கள் - ஞானிகளானவர்கள்,பெற்றியை -
மேன்மைத் தன்மையை, பார் - இப்பூமியிலே, கொடா -
கொடுக்கும்படியாக, பெற்றது - அடையப்பட்டதாகிய, ஒன்றிலே -
இம்மனிதப்பிறப்பொன்றிலே, செற்றமும் - பகையினின்றும், ஆர்வமும்
- ஆசையினின்றும், சென்று - நீங்கி, நிற்பர் - சமத்துவ பாவனையில்
நிற்பார்கள், எ-று. (73)
214. அனந்தமாம் பிறவியு ளருந் தவனுனைப்
புணர்ந்தவும் பகைவனா யனந்தம் போலுமா
லனந்தமே யிவனுற வாகி வந்தவும்
நினைந்தபின் னிதுபகை யுறவி னீர்மையே.
(இ-ள்.) அனந்தமாம் - முடிவில்லாதனவாய் இதுவரையிலாகிய,
பிறவியுள் - பிறப்புக்களில், அருந்தவன் - அரிய தபத்தையுடைய
சஞ்சயந்தன், உனை - உன்னை, பகைவனாய் - சத்துருவாக,
புணர்ந்தவும் - சேர்ந்தனவும், அனந்தம் போலுமால் -
அனந்தமென்கிறதற்குச் சமானமாகவும் ஆகும், இவன் - இவ்வித்துத்
தந்தன், உறவாகி வந்தவும் - உறவினனாகி வந்தனவும், அனந்தம் -
அனந்தமாகும், பின் - பிறகு (அதாவது அவற்றிற்குப் பிந்தின
ஜன்மமாகிய இதில்), நினைந்த நீ சிந்தித்த, பகையுறவின் நீர்மை -
சத்துருத்துவமித்துருத்துவ ஸ்வபாவமானது, இது - இங்குக் கூறிய
இத்தன்மையதாகும் (அதாவது : நிலையில்லாத
தன்மையையுடையதாகும்), எ-று.
ஆல், ஏ - அசைகள். (74) |