பக்கம் எண் :


12மேருமந்தர புராணம்  


 

சாயலுடையவர்கள்; மணியை - இரத்தினத்தை,  மண்ணி - உருவகுத்து,
அலங்காரம்பண்ணி,   வைத்தனார்   -  வைத்ததைப் போன்றவர்கள்;
வஞ்சமில்  -  கபடமில்லாத,  மனத்தினார்  -  மனதையுடையவர்கள்;
பணிவிலா - தாழ்வில்லாத, ஒழுக்கினார்கள் - நடத்தை யுடையவர்கள்;
பண்ணவர் - அருகபரமனை,  பழிச்சுவார்  -  துதிப்பவர்கள்; சீலம் -
அவர்களது சீலாச்சாரம்,  இன்ன - இத் தன்மையாக, காமுறுந்தகைய -
விரும்புங் குண முடையதாகும், எ-று.                        (23)

 24. இடையறா தறிவொளி யிரவியங் கெழுதலால்
    கடையிலா வறிவிறைவ னாலயங்க ளல்லது
    படரொளி விமானத்தோடு பாயிருள தின்மைபோல்
    விடையுலாவி யாதியாய வேற்றிலிங்க மில்லையே.

     (இ-ள்.)  படர் - பரந்த, ஒளி - ஒளியையுடைய, விமானத்தோடு
-  சூரிய  விமானத்தோடு,  பாய் - பரந்த,  இருளது  -  இருளானது,
இன்மைபோல் - இல்லாமற் போவதுபோல்,  இடையறாது - நீங்காமல்,
அறிவு - அனந்த  ஞானமாகிற,  ஒளி  -  சோதியையுடைய, இரவி -
ஜினேஸ்வரனென்னுஞ்  சூரியன்,  அங்கு -அந்நாட்டில்,  எழுதலால் -
எப்போதும்  உதித்திருப்பதால்,   கடையிலா - முடிவிலாத,  அறிவு -
கேவல ஞானமுடைய,  இறைவன்  -  நாதனது,  ஆலயங்களல்லது -
கோவில்களே    யல்லாமல்,   விடையுலாவியாதியாய   -   விருஷப
வாஹனமேறிச்  செல்லும்  ஈஸ்வரன்   முதலாகிய,   வேற்றிலிங்கம் -
பேதஸ்வரூபம், இல்லை-, எ-று.                             (24)

 25. குறையிலாக் குடிகளாற் குழீஇயவூர் கொடைவளர்த்
    திறையிடு மிவற்றினா லியல்பினாய நாடெழின்
    னிறைமதி நடுவணெய்த னின்றமீன் குழாங்கள்போ
    லிறைவன திருக்கைசூழ்ந்த நாலொண்ணா யிரங்களே.

     (இ-ள்.)   குறையிலா   -   (தனம்  குணம் முதலியவைகளால்)
குறைவில்லாத,    குடிகளால்    -    குடிஜனங்களால்,    குழீஇய -
சேர்ந்திருக்கப்பெற்ற,  ஊர் - ஊர்கள் (அதாவது ஊரில் உள்ளவர்கள்),
கொடைவளர்த்து - தானங்களை  மிகுதியாகச்  செய்து,  இறையிடும் -
அரசனுக்கும் பகுதிப்பணம் கட்டும்,  இவற்றினால் - இவை முதலாகிய
தொழில்களினாலே, இயல்பினாய - நல்ல ஸ்வாபவத்தோடு கூடிய, நாடு
- அத்தேசத்தில்,  எழில்நிறை - கலைகளாகிய அழகு நிறைந்த, மதி -
சந்திரன்,  நடுவணெய்த  -  மத்தியிலிருப்ப,  நின்ற - சூழ்ந்திராநின்ற,
மீன்குழாங்கள்போல் - தாராகணங்களைப் போல்,  இறைவனதிருக்கை
-   அரசன்   இருப்பிடமாகிய   பிரதான   நகரத்தை,   சூழ்ந்த  -
சூழ்ந்திருக்கும் நகரங்கள், நாலெண்ணாயிரங்கள் - முப்பத்தீராயிரங்களாம்,
எ-று.

     இவை  சக்ரவர்த்தியின் ஆளுகைக்குட்பட்டுத் தனித்தனி அரசர்
ஆளும் நகரங்களாகும்.                                   (25)