என்றலும் நந்திப் புத்தேள் கணப்பொழு தெண்ணி முன்னாள் வன்றிறல் விடையோன் தேவிக் குரைத்தது மனத்துட் கொண்டான் அன்றவர்ப் பணிந்து மைந்தா அரன்உமைக் கியம்பு மாற்றம் நன்றுநீ கேட்டி யென்ன வரன்முறை நவில லுற்றான். 56 | என்று கூறவும், நந்தியெம் பெருமான் ஒருகணம் சிந்தித்து முன்னோர்கால் மிக்க வலியமைந்த இடப ஊர்தியை உடைய பெருமான் உமையம்மையார்க்கு அருளிய அதனைத் திருவுளங்கொண்டு, அப்பொழுது இறைவனை உமையம்மையொடும் பணிந்து ஞானப் புதல்வனே! இறைவன் பெருமாட்டிக் கியம்பிய வரலாற்றை செவ்விதின் நீ கேள் என்று வந்தவாறே சொல்லத் தொடங்கினார். சனற்குமாரப் படலம் முற்றுப் பெற்றது,. ஆகத் திருவிருத்தம் 413 தலவிசேடப் படலம் சிவபெருமான் திருவோலக்கச் சிறப்பு எழுசீரடி யாசிரிய விருத்தம் இழைத்தபன் மணிகள் காந்திவிட் டெறிக்கும் எரிசுடர்ப் பேரொளிப் பரப்பு, மழைக்களத் திறையைத் தொழப்புகுந் திறல் சால் வானவர் நோக்கலாற் றாது, விழித்துணை இமைப்பச் செய்தொறும் அவர்அவ் விளைவறி யாதெமக் கென்னே, பழுத்ததோ முடிவு காலமென் றழுங்கும் படியதோர் கனகமண் டபத்தில். 1 பதித்துள்ள பல மணிகளும் சுடர் விட்டு வீசும் தீயொத்த சுடர் கொண்ட பெரிய ஒளிப்படலை, மேகத்தை யொத்த திருநீலகண்டம் உடைய பெருமானைத் தொழப் புகுந்த வலிமை நிரம்பிய தேவர் காணும் வலியின்றி இருவிழிகளும் இமைக்கும்படி செய்யுந் தொறும் அத்தேவர் இமைத்தலின் காரணத்தை அறியாராய் என்னே! எங்கட்கு வாழுங் காலம் பழுத்ததோ என்று வருந்துதற்குக் காரணமாகிய ஒரு பொன் மண்டபத்தில், ஊழி முடிவில் இமையாக்கண்ணும் இமைக்கும், பிறவும் நேரும். ‘மரணமே கனிந்து நிற்கும்’ எனும் விசேடவுரையில் பழுத்தல்-உடம்பு போதல் (சீவக-1389) |