ஏக தண்டம், திரி தண்டம் தாங்கியுழல்வோர் முறையே சுமார்த்த வைணவ சந்நியாசிகள். ததீசி முனிவர், பிருகு முனிவர், அகத்தியர், நந்தியெம்பெருமான் முதலானோர் சாபங்களை ஏற்றமை கந்தபுராணம் முதலாகப் பல விடங்களிலும் காண்க. எவ்வ மேமிகுந் தமோகு ணம்பயின் றிழிந்த யோனியின் மீனமாதியாம், வெவ்வி னைப்பவந் தோறும் இன்னலே விரவு வாயென வெய்ய சாபம் இட், டவ்வி யத்தொகை இரிய நூறும்அப் பிருகு வெள்ளியால் ஆவி பெற்றெழு, நவ்வி வாள்விழி மனைவி தன்னொடு நாரி பாகனை வழுத்தி வைகினான். 8 ‘துன்பமே பெருகுந் தமோகுணம் பொருந்தி இழிந்த பிறப்பிடை மச்சம், கூர்மம் முதலிய கொடிய தீவினைப்பயனாகிய பிறவி தோறும் துன்பமே மருவுவா’ யென்று கொடிய சாபத்தைத் தந்து தீவினை ஒழிய அழிக்கின்ற அப்பிருகு முனிவர் சுக்கிரனால் உயிர் பெற்றெழுந்த மனைவியாகிய மான்போலும் மருண்ட நோக்கும் ஒளியும் அமைந்த கண்களையுடைய கியாதியோடும் மங்கை பங்கனைத் துதித்திருந்தனன். திருமால் காஞ்சியை யடைந்து தவம் புரிதல் நிறைமொ ழித்தவப் பிருகு ஓதிய சாபம் எய்திநெஞ் சழுங்கி ஏங்குபு, நறைம லர்த்துழாய்ப் படலை மார்பினான் நாடி னான்இதன் தீர்வி யாதெனப், பிறைமு டிச்சடைப் பிரான் உளன்மனுப் பிரமம் ஐந்துள யாமு ளேம்இனிக், குறைஎ மக்கெவன் என்று தேறினான் கொழிதி ரைப்புனற் கச்சி எய்தினான். 9 பயனால் நிறைந்த மொழியினையும் தவத்தினையு முடைய பிருகு முனிவர் விடுத்த சாபத்தைப் பெற்று மனம் வருந்தி ஏக்கமுற்றுத் தேன் பொருந்திய மலர்த்துளவ மாலையை யணிந்த மார்பினையுடைய திருமால் இச்சாபத்தைப் போக்கு முறை யாதென ஆராய்ந்துபிறையை முடிக்கண் அணிந்த பெருமானுளன் கணித்தற்குப் பஞ்சப்பிரம மந்திரம் உள வழி படவும் கணிக்கவும் யாமும் உளேம் இனி எமக்குக் குறை யாவுள என்று தெளிந்து நீர் சூழ்ந்த கச்சித்தலத்தினை அடைந்தனன். நிறைமொழி-அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைத் தந்தே விடும் மொழி. நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த, மறைமொழி தானே மந்திரன் என்ப’ (தொல்.) ‘கற்றுக்கொள்வனவாயுள நாவுள, இட்டுக் கொள்வன பூவுள நீருள, கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம், எற்றுக் கோநம னால்முனி வுண்பதே! (திருநா. ) என்னும் அருள்மொழி உணர்க. தூய நீர்ச்சிவ கங்கை வாவியுள் தோய்ந்தெ ழுந்தொரு மாவின் நீழல்வாழ், நாய னாரடி வழுத்தி ஏகிஅஞ் ஞாங்கர் வைகும்ஆச் சிரமம் ஒன்றமைத், தாயி டைச்சிவ லிங்கம் ஒன்றுகண் டன்பு கூர்தர அருச்சித் தேத்திஅங், கேயு மாறருள் பெற்று மாதவம் இயற்ற லுற்றனன் வயப்புள் ளூர்தியே. 10 |