பக்கம் எண் :


சுரகரேசப் படலம் 287


காவி-நீலோற்பலங்கள், அலர் ஈரம் சுனை-அலரா நின்ற குளிர்ந்த
சுனையிலுள்ள நீரானது, அளபு ஒன்று ஏறு அழகு ஊடு-ஒரு மாத்திரை
கூடிய அழகு ஊடு (அழகு-வனப்பு) (அளபொன்றேறிய வனப்பு என்றமையால்)
வானப்பு, வான் அப்பு ஊடு-ஆகாச கங்கையினிடத்தில், அலைந்து ஆடும்-
கலந்தசையும்.

     ஆளி முழக்கத்தில் நட்சத்திரங்கள் விண்ணினின்று உதிரும் என்பதும்,
சுனைநீர் ஆகாச கங்கையோடு கலக்கும் என்பதும் கருத்து. ஈரம் ஈரென
நின்றது செய்யுள் மரூஉ. சுனை, இட ஆகுபெயர்.

எழுத்து வருத்தனை

காந்தள் போல்வன காமுகர் வீழ்வன
போந்து சேர்ப்பர்கள் பூக்குறி வைப்பன
சாந்தம் நாறிய சாரலின் நாரிமார்
ஏந்து சீர்எழிற் கைதகை கேதகை.               16

     ஒரு பொருள் பயப்பதோர் சொல், கூறி, அதனில் ஒவ்வோர் எழுத்துச்
சேர்க்க வெவ்வேறு பொருள் பயப்பது எழுத்து வருத்தனை.

     சாந்தம் நாறிய சாரலின் நாரிமார் ஏந்து சீர் எழில் கை-சந்தன மரம்
வாசனை வீசாநின்ற அம்மலைப் பக்கங்களில் வசிக்கும் குறமகளிரது சிறப்பு
வாய்ந்த அழகிய கைகள், காந்தள் போல்வன-காந்தள் மலரை யொப்பனவாம்,
நாரிமார் தகை-அம்மடவார் வனப்பு, காமுகர் வீழ்வன-காமிகளால் மயங்கி
வீழப்படுவனவாம், போந்து சேர்ப்பர்கள் பூ குறி வைப்பன கேதகை-(இரவுக்
குறிக்கண்) வந்து (தலைவி வரப் பெறாமையால் தாம் வந்ததையறிதற்கு)
தலைவர்களால் அழகிய அறிகுறியாக வைக்கப்படுவன தாழை மலர்கள்.

     கை தகை கேதகை என்பன வற்றைக் கை தகை கேதகை எனப்
பிரித்துக் காந்தள் போல்வன காமுகர் வீழ்வன போந்து சேர்ப்பர்கள்
பூக்குறிவைப்பன என்பவற்றோடு முறை நிரனிறையாகக் கொள்க. கேதகை,
பொருளாகு பெயர், இரவுக் குறிக்கட் போந்த தலைவர் தலைவி
வரப்பெறாமையின் குறிவைத்துச் சென்றமை தலைவிக்கு இரங்கலைத் தரும்
ஆதலின் இரங்கலுரிப் பொருட்குரிய நெய்தற் றலைவராகச் சேர்ப்பரென்றார்.

உபய நாக பந்தம்

ஆம்ப னீண்மருப் பாரமு மாசறு
காம்பு மாண வுகுங்கதிர் முத்தமும்
பூம்ப சும்பொழி னீடும் புரையிரு
ளோம்பிப் பப்பொளி மேவுமுட் டாதரோ.         17

     இரண்டு பாம்பு தம்முள் இணைவனவாக உபதேச முறையான்
வரையப்பட்டு, அவற்றுள் இரண்டு கவி எழுதப்பட்டுச் சந்திகளினின்ற
எழுத்தே மற்றை யிடங்களினும் உறுப்பாய் நிற்க வருவது உபய நாக பந்தம்.