பக்கம் எண் :


342காஞ்சிப் புராணம்


     வண்டுகள் தங்குகின்ற பொன்னிற மலர்களைக் கொண்ட கொன்றையின்
செவ்விய மாலை மணங்கமழ்கின்ற தோளினையும் மேகம் தாழ்வுற உயரும்
நீலகண்டத்தையுமுடைய பெருமான் வைகுற்ற பல பத்திரேசர் பெருமையைக்
கூறினோம். மீன்களைக் கொண்ட தடாகங்கள் சூழ்ந்த அதன் மேற்றிசையில்
இந்திரன் வணங்க நிலைபெற்ற வன்மீக நாதேசத்தின் இயல்பினைக்
கூறுவோம்.

திருமால் தலைஇழந்த வரலாறு

புத்தேளிர் முன்நாள் ஒருங்கே குழீஇக்கொண்டு புகழ்எய்துவான்
முத்தீ வளர்த்தோர் மகம்வேட்க லுற்றார்கள் மொழிகின்றனர்
இத்தால் வருங்கீர்த்தி எல்லாம் நமக்கும் பொதுத்தான்எனக்
கொத்தார்மலர்க்கூந்தல்பங்கன் துணைத்தாள் குறிக்கொண்டரோ.   2

     தேவர் யாவரும் முன்னோர் காலத்தில் ஒருமனப்பட்டு ஓரிடத்திற்
கூடிப் புகழ்பெறும் பொருட்டு முத்தீயை ஓம்பும் ஓர் யாகத்தை விரும்பித்
தொடங்கலுற்றவர் தம்முட் கூறுகின்றனர். ‘இவ்வேள்வியால் வரும் புகழ்
முழுதும் நம்மவர் யாவர்க்கும் பொதுப்புகழ் ஆகும் என வரையறை செய்து
கொத்துக்களமைந்த மலரணிந்த கூந்தலை யுடைய உமையம்மையாரைப்
பங்கினி லுடையோன் இரு திருவடிகளைக் கருத்திற்கொண்டு,

     குருக்கேத் திரத்தே மகஞ்செய்யும் ஏல்வைக் கொழுங்
கொன்றைவெள், ளெருக்கோ டணைக்குஞ் சடைச்செம்ம லார்தம்மின்
அருள்கூர்தலால், உருக்கூர் பளிக்குப் பறம்பிற் பெருங்கீர்த்தி
உண்டாதலும், தருக்கான் முகுந்தன் கவர்ந்தான் நடந்தான் தடுப்பக்
கொடான்.                                            3

     குருக்கேத்திரத்தே வேள்வி செய்கையில் செவ்விய கொன்றை
மலரையும், வெள்ளெருக்க மலரையும் சடைமேற் கொள்ளும் அண்ணலாகிய
சிவபெருமானார் தமது திருவருட் செயலால் வடிவு தோற்றுகின்ற பளிங்கு
மலையினைப் போலப் பெரும்புகழ் வெளிப்படலும் திருமால் செருக்கினால்
வௌவிக்கொண்டு பிறர் பிறர் தடுப்பவும் பொதுவுடைமை ஆக்காமல்
ஓடினான்.

ஓடுந் திறங்கண்டு விண்ணோர் தொடர்ந்தெய்த லுற்றார் அவன்
பீடொன்று வில்லம்பு கைக்கொண்டு வெம்பூசல் பெரிதாற்றுபு
நீடும்பர் தம்மைப் புறங்கண்டு பின்நீ ளிடைச்சென்றுநின்
றீடின்றி எல்லீரும் ஒருவேற் குடைந்தீர்க ளெனநக்கனன்.    4

     ஓடும் நிலையை எண்ணித் தேவர் கைப்பற்றத் தொடர்ந்தோடினர்.
அம்மால் பெருமை பொருந்திய சார்ங்கம் என்னும் வில்லினையும்
அம்பினையும் கையிற்கொண்டு கொடிய போரினை பெரிதும் ஆற்றித் தேவர்
குழுவினைத் தோல்வியுறச் செய்து பின்னர் நெடுந்தொலைவிற் சென்று
நின்று ‘ஒப்பின்றி நீவீர் பல்லீருந்தனித்து நின்றேனாகிய எனக்குப்
புறங்கொடுத்தீர்கள்’ என இகழ்ந்து சிரித்தனன்.