பக்கம் எண் :


426காஞ்சிப் புராணம்


     இறந்தனர் வலியுடைய வீரர்; இறந்தன யானைகள்; செந்நீர் நிலத்தை
மறைத்தன; பிணங்களும் மறைத்தன; காக்கைகளும், பருந்துகளும் கூடின;
பேய்கள் உவகைக் கூத்தாடின. உடற்குறைகள் ஆடின.

எங்கணும் நிணங்குடர் இறைச்சிகொழு மூளை
எங்கணும் முரிந்தசிலை வாள்பலகை எஃகம்
எங்கணும் இறுத்தகிடு கச்சுருள் கொடிஞ்சி
எங்கணும் முடித்தலை நிமிர்ந்தன இடங்கள்.      65

     யாண்டும் நிணமும், குடரும், இறைச்சியும், கொழுவும், மூளையும்,
முரிந்தனவாகிய வில்லும், வாளும், கேடகமும், வேலும், ஒடிந்த தேர்
மரச்சுற்றும், கொடிஞ்சியும், அற்ற முடியுடைத் தலைகளும் ஆக நிவந்தன.

பிணங்களொ டயர்ந்துவிழு பெற்றியரும் வீழ்தோட்
கணங்களொடு தண்டமும் விசித்தகடி வள்வார்க்
குணங்களொடு புல்லிய கொழுங்குடரும் அங்கேழ்
நிணங்களொடு பன்மணியும் நீத்திறிய லாகா.     66

     பிணங்களையும், மூர்ச்சையுற்று வீழ்ந்தவர்களையும், வீழ்ந்ததோட்
குழாங்களையும், தண்டாயுதங்களையும், வீக்கிய அச்சத்தைச் செய்யும் கிழித்த
வார்நாணிகளையும், பொதிந்த குடர்களையும், நிறமுடைய நிணங்களையும்
பல மணிகளையும் பிரித்தறியக் கூடா ஆயின.

மண்ணிடம் மெலிந்தது பிணங்குவையின் வாளோன்
நண்ணிடம் மெலிந்ததுடல் விட்டுறுநர் போழ்ந்து
விண்ணிடம் மெலிந்ததவர் துன்னிமிடை வோரை
எண்ணிட மெலிந்தனர் விசும்பின்இமை யாதார்.   67

     பிணக்குவியலாற் பொறாது மண்ணிட மெலிவுற்றது; போரில் உயிர்
விட்டு வீரசுவர்க்கம் புகுவோர் சூரியனை ஊடுருவிச் செல்லுதலின் அதன்
நடுவிடம் மெலிந்தது. அக்குழுவினர் நெருங்கி விண்ணிடம் மெலிந்தது.
அங்ஙனம் நெருங்குவோரை எண்ணுதலாற் றேவர் குழைந்தனர்.

     போரில் இறந்தோர் சூரியன் வழியாகச் சுவர்க்கம் புகல்: ‘‘கதிருடல்
வழிபோய்க் கல்லுழை நின்றோர்’’ (கல்லாடம்)

     நள்ளிடம்-நடுவிடம்; நண்ணிடம் என மரீஇயிற்று. ‘‘நள்ளனல்’’
நண்ணனல் (சிவஞா. சூ. அதி. 2-4) எனவும், ‘நீளுல கெலாம்’ நீணுல
கெலாம் (திருநா. கோயிற்குறுந்தொகை) எனவும் வந்தமை காண்க.

மிடைந்துசமர் இன்னணம் விளைத்துழி இசைத்தேன்
குடைந்ததொடை வல்லவுண வீரர்வலி குன்றி
உடைந்தனர் நடுங்கினர் ஒடுங்கினர் சிதர்ந்தார்
இடைந்தனர் பெயர்ந்தனர் இரிந்தனர்கள் எங்கும்.    68