இத்தன்மை வாய்ந்த செறிந்த போர் நிகழ்கின்ற களத்தில் எமது பெருமான் அருளைப் பெற்றுள்ள கண்ணன் வலிமை மிக்கு நாணி பூட்டிய வில்லையும், அம்பையும் தேரையும், சிகரத்தையு முறித்து வஞ்சனைபுரிகின்ற அசுரர் தலைவனைத் தனியனாகச் செய்தனன். கருப்புத் துண்டென நூற்றுப்பத் தடுக்கிய கனகப் பொருப்புத் தோள்களை அரிவுழி மதன்உடல் பொடித்த நெருப்புக் கண்ணினான் எதிரெழுந் தருளிநீள் கருணை மருப்புக் குஞ்சரங் காத்தவன் மேற்செல வழங்கி. 104 | மேரு மலையை ஒத்த ஆயிரந் தோள்களைக் கரும்பினைத் துண்டாடல் போல வெட்டுழி மன்மதனை நீறாக்கிய கனல் விழிப்பெருமான் எதிரெழுந்தருளி ஆதிமூலமே என்றழைத்த யானையைக் காத்த பிரானுக்குப் பேரருள் புரிந்து, கண்ண னேஇது கேட்டிஇக் கனைகழல் அவுணன் அண்ணல் வாய்மைஉன் போல்எமக் கன்புமிக் குடையான் எண்ணம் வாய்ப்பநம் பூசையின் அமைந்ததோள் இரண்டும் வண்ண வாள்மலர் வதனமும் அரிதல்ஓம் பென்றான். 105 | ‘கண்ணனே! இதனைக்கேள், ஒலிக்கின்ற கழலை இவ்வாணன் சிறந்த உண்மை அன்புடைய உன்னைப்போலவே எம்மிடத்து அன்பு மிகவும் உடையவன். கருத்தமைய நமது பூசனைக்குரிய தோள்களிரண்டினையும் நிறமும், ஒளியும் உடைய மலர் போலும் முகத்தையும் அரிதலை ஒழிக’ என்றனர். அறுசீரடி யாசிரிய விருத்தம் என்ற வாய்மொழி கேட்டலும் தொழுதெழுந் தியாதவர் குலத்தோன்றல், மன்ற மாமறை முழுவதும் முழுவதும் உருத்திரன் எனுமாற்றால், ஒன்றும் அன்பொடும் உன்னடி அருச்சனை உஞற்றினோன் எமையெல்லாம், நன்று பூசனை இயற்றியோன் ஆதலின் நாற்கரம் விடுத்தேனால். 106 என்ற திருவாக்கினைக் கேட்ட பொழுதே தொழுதெழுந்து யது மரபில் வந்த கண்ணபிரான் பெருமை பொருந்திய வேதங்கள் முற்றும் எல்லாப் பொருள்களும் உருத்திரனே எனத் தெளியக் கூறும் முறையால் கவர்த்த அன்பின்றி ஒன்றுபட்ட அன்பினால் உன் திருவடிக்குப் பூசனை புரிந்தோன் எம்மை யெல்லாம் பெரிதும் பூசனை புரிந்தோன் ஆகலின், நான்கு கரங்களை விடுத்தேன். ‘எமையெலாம்’ என்றது மற்றைத் தேவரையும் கொண்டு கூறியது. நமகசமகங்களால் சீருத்திரம் எல்லாப்பொருள்களு மாதலைத் தனித்தனி எடுத்தோதும் தாமெல்லோரும் வணங்குந்தலைவனை வணங்குவோர் தம்மையும் மகிழ்வித்தவராவர் என்பது கருத்து. |