நிலைஇயற் பொருளும் இயங்கியற் பொருளும் நிலைபெறத் தொழிற்படுத் துடைய, தலைவன்அங் கவனே பனிவரைப் பிராட்டி தன்னையும் நின்னையும் இடப்பால், மலரணைப் புத்தேள் தன்னையும் எனையும் வலப்புடைக் காலருத் திரனைக், கலைமகள் தனையும் உளத்திடைத் தந்தான் காத்துயிர்த் தழிப்பது கருதி. 21 ‘சராசரங்களை நிலையாக இயக்கும் தலைவராகிய அப்பெருமானாரே உமையம்மையையும், உம்மையும் இடப்புறத்தினும், பிரமனையும் அடியேனையும் வலப்புறத்தினும், உருத்திரமூர்த்தியையும், நாமகளையும் திருவுள்ளத்தினுமாகப் படைத்தனர். அம் மூவரும் முறையே காத்தலையும், படைத்தலையும், அழித்தலையும், மேற்கொள்ளுமாறு திருவுள்ளங் கொண்டு தந்தனர். அகிலமுந் தானே அருள்தொழில் நடாத்தும் ஆங்கவற் கெவற்றினும் சால, மிகுபெருங் காதல் உமையவ ளிடத்தும் விரவு நின் னிடத்தினும் அன்றே, முகில்உறழ் கூந்தல் அவளென நீயும் முதல்வனே உன்னடி யேற்கு, மகிழ்வுமீக் கிளைப்ப அவ்வுருப் பெறுதி என்றனள் மலரணைக் கிழத்தி. 22 எல்லாவுலகங்களையும் தம் அருட்டிறனால் நடாத்தும் அப்பிரானார்க்கு எப்பொருள்களினும் பெரிதும் மிகப் பெரிய விருப்பம் உமையம்மை யாரிடத்தும் வியாபிக்கும் நும்மிடத்தும் அன்றே? ஆகலின், மேகத்தை யொக்கும் கூந்தலையுடைய உமையம்மையார் பொன்னிற வடிவம் பெற்றாற்போல முதல்வரே நீவிரும் அடியேனுக்கு மகிழ்ச்சி மேலும் தழைப்ப அப் பவள நிறத்தைப் பெறுவீராக” என வேண்டினள் திருமகள். விளங்கிழை மாற்றம் அச்சுதன் கேளா வெகுண்டுநின் மனக்கருத் திதுவேல், களங்கனி அனையேன் றன்னுடன் இந்நாள் காறும்நீ பொலஞ்சுடர் நிறத்தாய், வளங்கெழும் இன்பம் என்னணம் நுகர்ந்தாய் மற்றினிச் செக்கர்வான் உருவம், உளங்கொளப் பெறுகேன் என்றவட் கியம்பிக் கதுமெனக் கரந்தனன் ஊங்கு. 23 திருமகளின் பேச்சைக் கேட்ட திருமால் சினங்கொண்டு ‘நின் எண்ணம் இதுவாயின் களாப்பழம் போலும் நிறமுடைய என்னுடனே இன்று வரையினும், பொன்னிறமுடைய வடிவீ! நீ நலமிகும் இன்பம் எவ்வாறு நுகர்ந்தனை. இனி, செவ்வானம் போலும் நிறத்தினை நின்மனம் விரும்புமாறு எய்துவேன்’ என்றத் திருமகட்குக் கூறி அங்கு நின்றும் அப்பொழுதே மறைந்தனர். கச்சிமா நகரம் எய்திவீ ராட்ட காசநல் வரைப்பினுக் கெதிரா, அச்சிவன் வீர நகைதிரண் டனைய சக்கர தீர்த்தம்உண் டாக்கி, முச்சகம் ஏத்துங் கங்கையிற் சிறந்த அத்தடம் மூழ்கிநோன் பியற்றிப், பச்சைமால் வதிந்தான் வதிந்திடம் பச்சை வண்ணன்ஆ லயமெனப் படுமால். 24 |