பக்கம் எண் :


தழுவக் குழைந்த படலம் 621


ஆயிடை அரிதின் நீங்கி அங்கண ரருளால் அங்கண்
பாயபல் கணங்கள் உய்த்த படரொளி எறிக்கும் அங்கேழ்
மாயிரு விமானத் தும்பர் மன்னுயிர்த் தோழி மார்தம்
ஆயமும் தானும் ஏறி வழிக்கொண்டாள் அனைய காலை.   111

     அவ்விடத்துப் பரவிய பல்கணநாதர் பெருமான் ஆணைவழிக்
கொணர்ந்து நிறுத்திய பரவிய ஒளியை வீசும் அழகிய நிறமுடைய மிகப்
பெரிய விமானத்தின் மிசை மன்னும் உயிர்ப்பாங்கியரும், உடன் சூழும்
தோழியர் குழாமும் தாமும் ஏறி அங்கண் நின்றும் பிரியலாகாது பிரிந்து
வழிச்செலவு கொண்டனர். அப்பொழுது,

எழுசீரடி யாசிரிய விருத்தம்

     உலகெலாம் ஈன்ற எம்பெரு மாட்டி ஓங்குயர் விழுப்புகழ்க்
கம்பத், தலைவரை விதியான் அருச்சனை செய்யச் சார்கின்றாள்
என்றுபே ரோகை, மலியெடுத் தியம்பு மங்களங் கேளா உருத்திர
மடந்தையர் முதலோர், அலகிலா மகிழ்ச்சி மீக்கொளும் களிப்பின்
ஆர்த்தெழுந் தொருங்குவந் திறுத்தார்.                     112

     அனைத்துலகையும் பயந்த எம்மன்னையார் மிக்குயர்ந்த பெரும்
புகழினையுடைய திருவேகம்ப நாயகரை விதியொடும் பூசனை புரியச்
சார்கின்றனர். என்ற பேருவகை நிறைந்த செய்தியைப் பெரிதும்
எடுத்தியம்பும் மங்கலத்தை உருத்திர மகளிர் முதலானோர் செவிமடுத்து
அளவில்லாத பெருங்களிப்பு மீக்கொள்ளும் மகிழ்ச்சியினால் ஆரவாரித்து
வந் தொருங்கு கூடினர்.

     தாமரை மடவார் புடைபரந் தணுகத் தாமரை மடவரல் வந்தாள்,
நாமிசைக் கிழத்தி பற்பல வெள்ள நாரியர் புடைவர வந்தாள், கோமள
வனப்பின் ஆம்பல்மெல் லியலார் குழாத்துடன் உயர்சசி வந்தாள்,
காமரு மாதர் எழுவரும் சங்கக் கன்னியர் சூழ்தர வந்தார்.       113

     பதுமம் என்னும் அளவுடைய சிலதியர் தன்னைச் சூழ்ந்துவர
இலக்குமி வந்தனள். மிகப்பல வெள்ளமென்னும் மகளிர் புடைசூழச்
சரசுவதியும் வந்தனள்; இளமையும், அழகுடைய ஆம்பல் என்னும்
அளவுடைய தோழியர் குழுவுடன் உயர்ந்த இந்திராணியும் வந்தனள்;
மேலும், அழகிய சப்தமாதர்களும் சங்கம் என்னும் அளவிற் சேடியர்
சூழ்தர வந்தனர்.

     தாமரை, வெள்ளம், ஆம்பல், சங்கம் என்னும் அளவு குறித்து வந்தன
அல்ல; மிகப்பலரைக் குறிக்க வந்தன. சப்தமாதர், அபிராமி, மகேசுவரி,
கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி என்பவர்,

     வான்மட மகளிர் வேறுபல் வகுப்பின் மங்கையர் பற்பலாயிரவர்,
ஊன்மலி சூலத் திடாகினி காளி யோகினித் திறத்தவர்