மொழியினையுடைய மகளிர் குழாம் குழாமாய் நின்று பல்லாண்டு பாடவும், மூட்டுவாயமைந்த மணிக்குழை மகளிர் பல்லோரும் வீரருடையினராய் ஒளி விடுகின்ற வாட் படையினராய்ச் செல்லவும், வேதகம் பயக்குஞ் சிலைமுதலான விம்மிதத் திறத்தன பலவும், பூதிமிக் களிக்கும் கடவுளர் தருக்கள் புண்ணிய தீர்த்தங்கள் நதிகள், ஏதமில் சிறப்பின் இனையன பிறவும் உடன்செலச் சிந்தொடு குறள்கள், காதலின் முன்னே கையிணை வீசிக் கதுமெனக் குறுகுறு நடப்ப. 118 இரும்பு முதலிய வற்றைப் பொன்னாக்குகின்ற இங்ஙனம் வேதிக்கின்ற குளிகைக்கல் முதலாம் விம்மிதம் ஊட்டுவன பல் வகையவும், செல்வங்களை அடுத்தவர்க்குப் பெரிதும் வழங்கும் தெய்வத் தருக்களும், புண்ணிய தீர்த்தங்களும், நதிகளும், குற்றமற்ற சிறப்பினையுடைய இவைபோல்வன பிறவும் உடன் போதக் குறுகிய வடிவுடைய சிந்துகளும், மிகக் குறுகிய குறள்களுமாகிய பூதகணங்களும் விருப்புடன் கைகளை வீசி விரைவாகக் குறு குறு நடந்து முன் செல்லவும். கலகல முழக்கும் களகள முழக்கும் கலின்கலின் முழக்கமும் கருவிச், சலசல முழக்கும் சளசள முழக்கும் சடசட முழக்கமும் ஏனைச், சிலசில முழக்கும் அரகர முழக்கும் சயசய முழக்கும் எண்டிசைவாய்ப், பலபல முழக்கும் அடைத்துமேல் ஓங்கிப் படியொடு வானமும் நிறைப்ப. 119 நால்வகை இன்னியங்களின் முழக்கமும், விரக்கழல்கள் கிண்கிணிகள், மங்கலப்பாடல்கள் முதலாக எழும் பல் வகை வேற்றொலிகளும் அரகர என்னும் முழக்கமும் சயசய என்னும் முழக்கமும் ஒருங்கு திரண்டு மண்ணொடு விண்ணிடத்தும் இடைப்பட்ட எண்டிசையிலும் வான வெளியிலுமாகச் செறிந்தன. மறைமுதல் ஒருபால் மணந்தவள் வந்தாள் வானவர்க் கரியவள் வந்தாள், நிறைபெருங் கருணை நாயகி வந்தாள் நிருமலப் பேரொளி வந்தாள், அறைபுனல் காஞ்சிக் கம்பரை வணங்க அகிலமும் ஆதிநாள் பயந்த, இறைவியே வந்தாள் என்றுபல் சின்னத் தெழும்ஒலி யாங்கனும் விம்ம. 120 மறை முதல்வனை ஒரு புடை மணந்தவள் வந்தாள் எனவும் வானவர்க்கும் காண்டற்கரியவள் வந்தாள் எனவும், நிறைந்த பெருங்கருணை நாயகி வந்தாள் எனவும், விமலப் பேரொளி வந்தாள் எனவும், ஒலிக்கின்ற நீர் மருவிய காஞ்சியில் வீற்றிருக்கின்ற திருவேகம்பரைப் பூசனை செய்தற் பொருட்டுப் பல்லுலகங்களையும் சிருட்டிக் காலத்தில் படைத்த முதல்வியே வந்தாள் எனவும் பல் ஊது கொம்புகளில் எழும் விருதொலி யாண்டும் பெருகவும். |