கம்பராமாயணம், சென்னைக் கம்பன் கழகப் பதிப்பின்படி, பாலகாண்டம் பாயிரம் தவிர்த்து 23 படலங்களையும் 1312 விருத்தங்களையும் உடையதாக விளங்குகிறது. வை. மு. கோ., அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஆழ்வார் திருநகரி, கலாட்சேத்ரா போன்ற பதிப்புகள் படல எண்ணிக்கையிலும், பாடல் எண்ணிக்கையிலும், படலப் பெயர்களிலும் வேறுபடுவதைக் காணலாம். தெலுகு இராமாயணங்களான ரங்க நாத ராமாயணம், பாஸ்கர ராமாயணம், மொல்ல ராமாயணம் மூன்றிலும் காண்ட உட்பிரிவுகள் இல்லை. குமார வான்மீகியின் தொரவெ இராமாயணம் காண்டந்தோறும் சந்தி என்னும் உட்பிரிவை உடையதாக விளங்குகிறது. மலையாள இராமாயணங்களில் காண்டப் பிரிவுகள் உண்டு. துளசி இராமாயணத்தின் பாலகாண்டம் 361 ஈரடிப் பாக்களையும் (தோகா) ஒவ்வொரு ஈரடிப் பாவிற்குப் பின்னர் நான்கு நான்கு நாலடிப் பாக்களையும் (சௌபாயி) உடையதாக விளங்குகிறது. சிற்சில இடங்களில் ஒரே எண்ணின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட ஈரடிப் பாக்களும் (29. அ. ஆ. இ), நான்கிற்கும் மேற்பட்ட நாலடிப் பாக்களும் (327), சில இடங்களில் நாலடிப் பாவிற்கும் ஈரடிப் பாவிற்கும் இடையில் இயைபுத்தொடை அமைந்த நாலடிச் சந்தப் பாடல்களும் 326), விரவிக் காணப்படுகின்றன. காண்டப் பிரிவு தவிர, படலம், சருக்கம் போன்ற உட்பிரிவுகள் உடையதாகத் துளசியின் காப்பியம் அமையவில்லை. பல்வேறு இராமாயண நூல்களை நோக்குமிடத்து வான்மீகத்தைப் பின்பற்றிய இராமாயணங்கள் எல்லாம் காண்டப் பிரிவுகளில் வான்மீகி இராமாயணத்தை ஒத்து அமைகின்றன என்றும், காண்டத்தின் உட்பிரிவுகளைப் பொறுத்தவரையில் தத்தம் இலக்கிய மரபிற்கேற்பப் படலம், சருக்கம், சந்தி போன்ற உட்பிரிவுகளைக் கொண்டு அமைகின்றன என்றும், சில உட்பிரிவுகளே இல்லாமல் பாடல் எண்களை மட்டும் கொண்டு அமைந்துள்ளன என்றும் அறிகிறோம். துளசி இராமாயணத்தின் அமைப்பைப் பொறுத்த வரையில், 361 ஈரடிப் பாடல்களையும் அவற்றிற்குரிய நாலடிப் பாடல்களையும் உடையதாகக் காணுகிறோம். பாலகாண்டத்தின் முதல் 43 ஈரடிப் பாடல்களை வாழ்த்து, அவையடக்கம் ஆகியவற்றைக் கொண்ட பாயிரப் பகுதியாக விளங்குகிறது. சிவன், சக்தி இருவரின் விவாதம், தக்கன் வேள்வி அழிவு, சிவன் - சக்தி திருமணம், மன்மதன் அழிவு, இராமனின் அவதாரத்திற்குரிய காரணங்கள், |